நாம் இந்த உலகில் செல்வச்செழிப்புடனும், புகழுடனும் நடமாட காரணமானவர்கள் பெற்றோர். சில பிள்ளைகள் பெற்றோர் சொல் கேளாமல், தறுதலைகளாக திரிந்துவிட்டு, இறுதியில் பெற்றோர் மீது பழி போடுகிறார்கள். பெற்றவர்கள் தந்த பணத்தை தீமை தரும் பொழுதுபோக்குகளில் செலவிடுகிறார்கள். இவ்வாறு தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு, பெற்றவர்களைப் பழிப்பதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? மேலும், சிலர் நன்றி மறந்து தங்களை ஆளாக்கிய பெற்றோருக்கு ஒரு வேளை கஞ்சி கூட தராமல் கொடுமை செய்கிறார்கள். மத்திய அரசு முதியோர் குறைதீர்ப்பு ஆணையம் ஒன்றை அமைத்து, கொடுமைக்கார பிள்ளைகளிடமிருந்து பெற்றவர்களைக் காப்பாற்றும் சட்டம் கொண்டு வருமளவு நிலைமை போய் விட்டது. “உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக,” என்றும், “உன்னைப் பெற்ற தகப்பனுக்கு செவிகொடு, உன் தாய் வயது சென்றவளாகும் போது அவளை அசட்டை பண்ணாதே,” என்கிறது பைபிள். குழந்தைகளே! பெற்றோர் உங்களைக் காக்க கடுமையாகப் போராடுகிறார்கள். அவர்களை எதிர்காலத்தில் பாதுகாக்க வேண்டுமென்ற நல்லெண்ண விதையை இப்போதே உங்கள் மனதில் ஊன்றுங்கள். தீய பழக்கங்களுக்கு ஆளாகாதீர்கள்.