திருப்பரங்குன்றத்தில் 4 உப கோயில்களுக்கு நாளை கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2025 12:06
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான மலை மேலுள்ள காசி விஸ்வநாதர் கோயில் உட்பட 4 உப கோயில்களுக்கு நாளை (ஜூன் 8) கும்பாபிஷேகம் நடக்கிறது. சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. முதல் கட்டமாக உபகோயில்களான சொக்கநாதர் கோயில், பழநி ஆண்டவர் கோயில், பாம்பலம்மன் கோயில், அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி கோயில்களில் ஏப். 16ல் கும்பிஷேகம் நடந்தது. இரண்டாம் கட்டமாக மலை மேல் காசி விசுவநாதர் கோயில், சரவணப் பொய்கை ஆறுமுகநாத சுவாமி கோயில், மலைக்கு பின்புறம் பால் சுனைகண்ட சிவபெருமான் கோயில், சப்த கன்னிமார் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு மே 4ல் பாலாலயம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் துவங்கும் வகையில் 4 உப கோயில்களிலும் இன்று மாலை யாகசாலை பூஜை துவங்குகிறது. நாளை காலை யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு அதிகாலை 5:45 மணிக்கு மேல் காலை 6:15 மணிக்குள் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், சரவண பொய்கை ஆறுமுகநாத சுவாமி கோயில், பால் சுனைகண்ட சிவபெருமான் கோயில், சப்த கன்னிமார் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.