பதிவு செய்த நாள்
17
ஏப்
2017
11:04
திருவள்ளூர்: திருப்பதி - திருமலை தேவஸ்தானம் சார்பில், திருவள்ளூரில் சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருப்பதி – திருமலை தேவஸ்தானம் சார்பில், திருவள்ளூர் முதல் முறையாக, சீனிவாச திருக்கல்யாண உற்சவம், 14ம் தேதி ஐ.சி.எம்.ஆர்., அருகில் உள்ள காலி மைதானத்தில் துவங்கியது. முதல் நாளன்று, யாக பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. இரண்டாவது நாளன்று, ஊஞ்சல் சேவை மற்றும் சிறப்பு உபன்யாசம் நடந்தது. நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று, சிறப்பு சுதர்ஸன யாகமும், மாலை 7:00 மணியளவில் சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதற்காக , மேடை யில், குபேர அம்சத்தில், சீனிவாச பெருமாள் எழுந்தருளினார். அருகில், பத்மாவதி தாயார், ஏழுமலையான் திருமண கோலத்தில் எழுந்தருளினர். திருப்பதி– திருமலை தேவஸ்தானத்தைச் சேர்ந்த பட்டாச்சாரியார்கள், திருக்கல்யாண உற்சவத்தை விக்னேஸ்வர பூஜையுடன் துவக்கினர். அங்குரார்ப்பணம் பூஜை நடத்தப்பட்டதும், ஏழுமலையான் மற்றும் பத்மாவதி தயாருக்கு ரக்ஷாபந்தணம் எனப்படும் கங்கணம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அக்னி பூஜை நடத்தப்பட்டது. அதன் பின், சீனிவாச திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது.