வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா மே 9ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2017 12:04
தேனி:வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 9ல் துவங்குகிறது. இதையொட்டி நாளை கொடியேற்றப்படுகிறது.வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தென் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்றதாகும். தேனி மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். இக்கோயில் சித்திரை திருவிழா நிகழ்வுகளாக இன்று கம்பம் கொண்டு வந்து அம்பாள் கோயில் வீட்டிலிருந்து கோயிலுக்கு எழுந்தருளுகிறார். நாளை கொடியேற்றம் நடக்கிறது.
இதனை தொடர்ந்து பக்தர்கள் விரதம் இருப்பர். திருவிழா மே 9ம்தேதி துவங்கி ஒவ்வொரு நாளும் அம்பாள் மண்டகப்படிகளில் எழுந்தருளல், அம்மன் புறப்பாடு, புஷ்ப பல்லக்கு என உலா வருகிறார். 12ம்தேதி தேர் வடம் பிடித்து இழுத்தல், 15ம்தேதி தேர் நிலைக்கு வருகிறது. 16ம்தேதி ஊர் பொங்கலுடன் திருவிழா நிறைவு பெறும்.
அம்மன் விரதம்
அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் திருவிழா நாட்களில் செலுத்துவதே சிறந்த பலன் அளிக்கும். அம்மன் இன்று முதல் மே 8 ம்தேதி வரை விரதத்தில் இருப்பதால் இன்று முதல் மூலவருக்கு நெய்வேத்தியம் செய்யப்படுவதில்லை. இந்த நாட்களில் அம்மன் வணங்கும் ஈஸ்வர மூர்த்தியாய் விளங்கும் திருக்கம்பத்திற்கு துள்ளுமாவு பூஜை மட்டுமே செய்வது வழக்கம்.
அங்கபிரதட்சண அனுமதி
சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பக்தர்கள் மே 9 முதல் 16ம்தேதி வரையுள்ள எட்டு நாட்களுக்குள் நேர்த்திக்கடன் செலுத்தலாம். மேலும் அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் ஏப்., 20ம்தேதி முதல் மே 7 ம்தேதிக்குள் செலுத்துமாறு கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்பின் பக்தர்கள் வருகையை முறைப்படுத்த கோயில் வளாகத்தில் மரக்கம்புகள் ஊன்றி தடுப்பு அமைக்கப்படும். இதனால் அங்கப்பிரதட்சணம் செய்ய இடையூறு ஏற்படும் என கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.