சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் குதிரை வாகனத்தில் பவனி வருகின்றனர். நான்கு கால்களால் குதிரை நிற்பது போல, அறம்,பொருள், இன்பம், வீடுபேறு (மோட்சம்) என்னும் நான்கு கால்கள் வாழ்வைத் தாங்குகின்றன. தர்ம வழியில் தொழில் செய்து, பணம் தேடுபவன் இன்பமாக வாழ்வதோடு, இறைவன் திருவடியை அடையும் பேறு பெறுவான் என்பது இதன் பொருள். திறமை மிக்க வீரன் செலுத்தும் குதிரை இலக்கை அடைவது போல, மனக்குதிரையை அடக்கி சரியான வழியில் செலுத்துபவன் இறைவன் என்பதை இந்த வாகனம் உணர்த்துகிறது. மதுரைக்கும் குதிரைக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சரான மாணிக்கவாசகர் குதிரை வாங்கச் செல்லும் போது, சிவனே குருவாக காட்சியளித்து அருள்புரிந்தார். சுந்தரேஸ்வரர் குதிரை வீரனாக தோன்றி நரியைப்பரியாக்கியும், பரியை நரியாக்கியும் திருவிளையாடல் புரிந்தார். அந்த கோலத்தில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் குதிரை மீதேறி வருகின்றனர். இந்த உண்மையை உணர்ந்து அம்மையப்பரைத் தரிசிப்போம்.