பதிவு செய்த நாள்
02
மே
2017
12:05
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், சித்ரா பவுர்ணமி அன்று அன்ன தானம் செய்ய விரும்பு வோர், இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு: திருவண்ணாமலையில், 10ம் தேதி சித்ரா பவுர்ணமியன்று, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து, சுவாமி தரிசனம் செய்வர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க விரும்புவோர், இன்று முதல்,
8ம் தேதி வரை விண்ணப்பித்து, முன் அனுமதி பெற்று கொள்ள வேண்டும்.
அலுவலக வேலை நாட்களில், கலெக்டர் அலுவலகத்தின், இரண்டாவது மாடியில், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனரிடம் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து, முன் அனுமதி பெற வேண்டும். காலக் கெடுவுக்கு பின் விண்ணப்பிக்கும் மனுக்கள் நிராகரிக்கப்படும். அன்னதானம் வழங்குவோர், கிரிவல பாதையில் உணவு சமைக்கக் கூடாது. சமைத்து எடுத்து வரும் உணவை வழங்க வேண்டும். அவை தரமானதாக, தூய்மையானதாக இருக்க
வேண்டும். அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே வழங்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. இலை, தொன்னை, பாக்கு மட்டை பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பாக்கெட்டில் குடிநீர்
வினியோகிக்கக் கூடாது. சாப்பிடும் இடத்தில், குப்பை கூடைகள் வைக்கவேண்டும்.
அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கினால், போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.