சபரிமலையில் புதிய கொடிமரம் தங்கம் பதிக்கும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2017 11:05
சபரிமலை: சபரிமலையில் புது கொடிமரம் அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக, செப்பு தகடுகளில் தங்கம் பதிக்கும் பணி துவங்கியது. சபரிமலையில் பழுதடைந்த கொடிமரம் அப்புறப்படுத்தப்பட்டு, புதியது அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக ரான்னி காட்டில் தேக்கு மரம் வெட்டப்பட்டு, மூலிகை எண்ணெய்யில் ஊற வைக்கப்பட்டது.
தங்கம் காணிக்கை : கொடிமரத்தை சுற்றி அமைக்கப்படும் செப்பு தகடுகள், பம்பையில் உள்ளன. இத்தகடுகள் மீது தங்க தகடுகள் பதிக்கப்படும். இதற்காக 9.161 கிலோ தங்கத்தை, ஆந்திரா பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார்.தங்கம், தகடுகளாக மாற்றப்பட்டு செப்பு தகடுகள் மீது ஒட்டும் பணி பம்பையில் நடக்கிறது. இப் பணிகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஜூன் 25 கும்பாபிஷேகம் : மூலிகை எண்ணெய்யில் போடப்பட்ட தேக்கு மரம், தற்போது எடுத்து வைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் வடிந்ததும், மே 22-ல் பக்தர்கள் மூலம் சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்படும். இதற்காக 2000 பக்தர்களை ஐயப்ப சேவா சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.ஜூன் 25ல் கொடிமரத்துக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.