பதிவு செய்த நாள்
05
மே
2017
12:05
ஊத்துக்கோட்டை : கிராம தேவதை செல்லியம்மன் கோவிலில், 10 படையல் திருவிழா, கடந்த, 2ம் தேதி கோலாகலமாக துவங்கியது. எல்லாபுரம் ஒன்றியம், லட்சிவாக்கம் கிராமத்தில் உள்ளது செல்லியம்மன் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் படையல் திருவிழா நடைபெறுவது வழக்கம். பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழா, கடந்த, 2ம் தேதி, காலை, 8:00 மணிக்கு அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. காலை, 11:00 மணிக்கு, செங்காளம்மனுக்கு ஊர் கூடி பொங்கல் வைத்து, கத்தரி பூஜை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு சக்தி அம்மனுக்கு கும்பம் படைத்து வழிபாடு நடந்தது. இரவு, 9:00 மணிக்கு, கோ பூஜை, முதல் மற்றும் இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து புதிதாக வண்ணம் தீட்டிய செல்லி அம்மன், பொன்னியம்மன் கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்தது. நேற்று முன்தினம், காலை, 9:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும், மதியம், 2:00 மணிக்கு பொங்கலிட்டு, காப்பு கட்டும் விழா நடந்தது. நேற்று காலை, வேப்பிலை சுற்றப் பட்ட கரகம் ஊர் முழுவதும் சுற்றி எடுத்து வரப்பட்டது. வரும், 9ம் தேதி வரை கரகம் ஒவ்வொரு நாளும் சுற்றி வரும். வரும், 10ம் தேதி, இரவு, 7:00 மணிக்கு, செல்லியம்மன் பூரண அலங்காரத்துடன் கோவிலில் இருந்து புறப்பட்டு, கிராம மண்ணடியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இரவு தெருக்கூத்து நடைபெறும். மறுநாள், 11ம் தேதி, காலை, 8:00 மணிக்கு படையல் திருவிழா நடைபெறும். இரவு, 7:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.