வீரபாண்டி கோயில் திருவிழாவில் கூடுதல் கட்டண வசூல் தடுக்க கலெக்டரிடம் இந்து முன்னணி மனு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2017 12:05
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் கூடுதல் கட்டண வசூலை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்து முன்னணியினர், கலெக்டரிடம் வெங்கடாசலத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா 9 ம் தேதி முதல் 16ம்தேதி வரை நடைபெறுகிறது. நேர்த்திக்கடன் செலுத்த தென்மாவட்ட அளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். ஆனால் வழக்கமாக பக்தர்களின் வருகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் இருப்பது இல்லை. திருவிழாவை பயன்படுத்தி பஸ் கட்டணம் முதல் பொழுது போக்கு அம்சங்கள் வரை கட்டண கொள்ளை நடத்துவதாக பக்தர்கள் புகார் கூறுகின்றனர்.
சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் திருவிழாவிற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாவட்டம் முழுவதிலும் இருந்து வீரபாண்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்களுக்கு புறப்படும் ஊரில் இருந்து வீரபாண்டி வரை ஒரே கட்டணம் என்ற ரீதியில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கின்றனர்.
இந்த பஸ்சில் எங்கு ஏறி, இறங்கினாலும் ஒரே கட்டணம் என்பதால் வழக்கமான கட்டணத்தை விட கூடுதலாக 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அரசு போக்குவரத்து கழகம் இம் முறை கூடுதல் வசூல் என்ற பெயரில் கட்டண கொள்ளை அடிக்காமல் வழக்கமான சாதாரண கட்டணத்தில் பஸ்களை இயக்க வேண்டும். சுகாதார வசதி குறைவு திருவிழா நாட்களில் சுகாதாரம், குடிநீர் வசதிக்காக கோயில் நிர்வாகம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்குகிறது.
ஆனால் பேரூராட்சி போதுமான குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்து தருவது இல்லை. இதனால் சில பக்தர்கள் நினைத்த இடத்தில் இயற்கை உபாதையை கழித்து சுகாதார சீர்கேட்டை உருவாக்குகின்றனர்.
இந்த ஆண்டு கோடை வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால் கூடுதல் குடிநீர் வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அதிக எண்ணிக்கையில் கழிப்பிடங்கள் அமைத்திட வேண்டும். திருவிழாவில் முடிகாணிக்கை செலுத்த ரூ.10 மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 5 முடிஎடுப்பவர்களுக்கு கூலியாக வழங்கப்படும்.
ஆனால் முடிக்காணிக்கை செலுத்துபவர்களிடம் தலா ரூ. 100 - 200 வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதுவும் தடுக்கப்பட வேண்டும். கட்டணம் நிர்ணயம் இந்த ஆண்டு ராட்டினம், பொழுது போக்கு அம்சங்களுக்கான டெண்டர் ஒரு கோடியே இரண்டரை லட்சம் ரூபாய்க்கு எடுத்துள்ளனர். இது கோயில் நிர்வாகத்திற்கு நல்ல வருமானம் என்றாலும் கூடுதல் தொகைக்கு டெண்டர் எடுத்துள்ள கான்ட்ராக்டர் பொழுது போக்கு அம்சங்களில் விளையாட 50 - 100 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கின்றனர்.கூடுதல் கட்டணம் நிர்ணயிப்பதால் ஏழை, எளியவர்களின் குழந்தைகள் அதில் விளையாட முடியாமல் வேடிக்கை பார்க்கும் நிலை உள்ளது. எனவே, பொழுது போக்கு அம்சங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும்.
இந்து முன்னணி மனு: இப்பிரச்னையில் பக்தர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தி தேனி நகர இந்து முன்னணி பொதுச்செயலாளர் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் வெங்கடாசலத்திடம் மனு அளித்துள்ளனர். அதில் சிறப்பு பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது. பொழுது போக்கு அம்சங்களில் விளையாட கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.