கோசலைக்கு முன்பே ராமனுக்கு ஒரு அம்மா இருந்தாள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! ராமாவதாரம் ராவண வதத்திற்காக நிகழ்ந்தது என்பர். ஆனால், ராமன் இப்பூமியில் அவதரிக்க காரணமாக இருந்தவர்கள் கவுதமர், அகலிகையும் தான். மனைவியைக் கல்லாகப் போ என்ற சபித்த கவுதமர், விமோசனமாக ராமனின் பாதத்தூளி (தூசு)பட்டதும் பெண்ணாவாய் என்று வரமும் கொடுத்தார். எனவே, தசரதரும், கோசலையும் பெற்றோர் ஆவதற்கு முன்பே கவுதமரும், அகல்யாவும் மனதால் ராமனுக்கு பெற்றோர் ஆகிவிட்டனர். ராமன் வந்து என்று அருள் தருவான் என்று பல யுகங்களாக காத்திருந்தாள் அகலிகை. அந்த நாளும் வந்தது. விஸ்வாமித்திரருடன் வந்து கொண்டிருந்த ராமனின் பாதத்தூளி பட்டு கல்லாக இருந்த அகலிகை பெண்ணாக மாறினாள். அப்போது அன்னையைப் போன்ற இவளுக்கு ஏன் இப்படி நேர்ந்தது என்று ராமபிரானும் அகலிகையை அன்னை என்றே குறிப்பிடுகிறார். ராமனின் உயர் பண்பு இதனால் வெளிப்படுகிறது.