ஒரு சமயம் வைவஸ்வத மனு அயோத்தியில் யாகம் செய்ய விரும்பினார். அப்போது அயோத்தியின் அருகில் புண்ணிய நதி ஏதும் இல்லாமலிருந்ததால் குல குருவான வசிஷ்டர் இமயத்தில் உள்ள மானஸரோவரிலிருந்து ஒரு நதியைக் கொண்டு வரும்படி ஆலோசனை கூறினார். மனுவும் குருவின் கட்டளைப்படி மானஸரோவரை நோக்கி அம்பு விடுத்தார். அம்பு மானஸ ரோவரத்தில் ஒரு பகுதியைச் சேதப்படுத்தி அதிலிருந்து அயோத்தியை நோக்கி நீர் பெருகும்படி செய்தது. ஸரோவரிலிருந்து வெளி வருவதால் சரயு என்று சிலரும், சரம் எனப்படும் அம்பு உண்டாக்கியதால் சரயு என்று சிலரும் அந்த நதியைக் கூறுவர். கங்கையைப் போன்று புனிதத் தன்மையுடைய சரயு நதியை கங்கையின் ஒரு கிளை நதியாகக் கருதுகிறார்கள். ராமபிரான் உலகைத் துறுக்கும்போது தன் பரிவாரங்களுடன் இந்த நதியில் மூழ்கி விஷ்ணு பதத்தை அடைந்தார்.