பதிவு செய்த நாள்
23
மே
2017
12:05
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையில் இருந்து, 30 கி.மீ., துாரத்தில் கண்ணமங்கலம் சாலையில் அமைந்துள்ளது பஞ்ச பாண்டவர் மலை. இந்த மலை மீது உள்ள வற்றாத சுனையும், சுனையை சுற்றிலும் புடைப்பு சிற்பங்களும் வியக்க வைப்பவையாக உள்ளன. இங்கு, குகை போன்ற அமைப்புடன் உள்ள சுனையின் மூலத்தை காண்பதரிது. நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இந்த மலை மீது அமைக்கப்பட்டுள்ள தர்கா, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.குன்றுகளும் பாறைகளுமாக அமைந்துள்ள மலைக்கு மேலே செல்வதற்காக படிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த திரளான மாணவர்கள், இங்குள்ள சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளை காண வந்து செல்கின்றனர். பழமையான இந்த தர்காவிற்கு முஸ்லிம் மதத்தினர் வந்து வழிபடுகின்றனர்.
இங்குள்ள குகைகளில் பஞ்ச பாண்டவர்கள் தங்கி இருந்ததாகவும், அதனாலேயே இந்த மலைக்கு பஞ்ச பாண்டவர் மலை என, பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. மலையின் வடக்கு பகுதியில், 120 அடி உயர குன்றின் அடிப்பகுதியில், ஏழு வாசல்களுடன் அமைக்கப்பட்டுள்ள குடைவரை மண்டபம், சிறப்பு வாய்ந்தது. தரையில் இருந்து ௭ அடி உயரத்தில் ஏழு வாசல்களுடன், இரண்டு கட்டமாக அமைந்துள்ள துாண்களும் பிரமிக்க வைக்கின்றன. சிலை அமைக்கப்படுவது போன்ற பீடங்கள் இருந்தாலும், எந்தவொரு சிலையும் அங்கு அமைக்கப்படவில்லை. ஏழு பீடங்களில் மையமாக உள்ள பீடத்தின் அருகே சென்றால், ஒருவித தெய்வீக மணம் வீசுவதை உணர முடிகிறது.
ஒற்றைக்கல் குடைவரை கோவில்: ஆர்.கேபேட்டை அடுத்துள்ளது சோளிங்கர் ரயில் நிலையம் எனப்படும் பாணாவரம். இந்த ஊரில் இருந்து, 7 கி.மீ., துாரத்தில், மகேந்திரவாடி கிராமத்தில் உள்ளது பல்லவர் காலத்து குடைவரை கோவில். குணபரன் எனும் மகேந்திரவர்மனால் ஏற்படுத்தப்பட்டது. இந்த கோவிலில், முராரி எனும் விஷ்ணு மூலவராக வீற்றிருக்கிறார். மகேந்திர விஷ்ணு கிரகம் என்ற பெயரும் இதற்குண்டு. சமவெளி நிலத்திலிருந்து வெளி கிளம்பியுள்ள குன்றை குடைந்து, இந்த கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய கோவில், முகப்பில் மூன்று வாயில்களுடனும் நான்கு துாண்களுடன் அமைந்துள்ளது. அதை தாண்டி அமைந்துள்ள கருவறை வாயிலில், வாயிற்காவலர்கள் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மூலவர், நரசிம்மர் வடிவில் உள்ளார். அருகில் உள்ள மற்றொரு சிற்பம், பாதி உடைந்த நிலையில் காணப்படுகிறது. துாண் ஒன்றில் மகேந்திரரின் கல்வெட்டு உள்ளது. குடைவரை கோவிலுக்கு எதிரே, மகேந்திர தடாகம் என்ற நீர்நிலை உள்ளது. தற்போது தண்ணீர் இல்லாததால், அதை அடையாளம் காண முடியவில்லை.இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் மகேந்திரகிரி மற்றும் பஞ்ச பாண்டவர் மலை குடைவரை கோவில்களுக்கு, மாணவர்கள் இந்த கோடை விடுமுறையில் குடும்பத்தினருடன் சென்று பார்த்து வருகின்றனர். தங்களின் சுற்றுப்பகுதியிலேயே அமைந்துள்ள இந்த வரலாற்று சின்னங்கள், அவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.