பதிவு செய்த நாள்
23
மே
2017
12:05
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைகோவிலில் விரிசல் விழுந்துள்ளது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரால், தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். வேதமே மலையாய் இருப்பதால், இந்த மலைக்கு, ’வேதகிரி’ என்ற பெயரும் உண்டு. இம்மலையில், 545 படிக்கட்டுகளுடன், 500 அடி உயரத்தில், வேதகிரீஸ்வரர் அமர்ந்திருப்பது, இந்த ஊரின் தனிச்சிறப்பாகும். சிறப்பு வாய்ந்த இத்தலத்தில், கொடிமரம் இருக்கும் வெளிப்புற சுவரில் விரிசல் ஏற்பட்டு, சேதமடைந்த நிலையில் உள்ளது. பாறைகளில், மரம், செடிகள் வளர்ந்துள்ளதால், சேதமடைந்த பகுதிகள், பக்தர்கள் மீது விழும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும், ஒற்றைகல் மண்டபத்தின், இறங்கு பகுதியில் பாறைகள் சேதமடைந்துள்ளன.அறநிலையத் துறையினரும், தொல்லியல் துறையினரும், கோவிலில் ஆய்வு செய்து, இவற்றை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பக்தர்களின் கருத்து: கோவிலில் சேதமடைந்துள்ள பகுதிகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட வேண்டும். மலைப்பகுதியில், ’பிளாஸ்டிக்’ பொருட்களை கொண்டு வர தடை விதிக்க வேண்டும். வயதானோர், மலை மீது ஏற மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்கள் வசதிக்காக, ’ரோப்கார்’ அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.