பதிவு செய்த நாள்
03
ஜூன்
2017
12:06
திருப்பூர்: அவிநாசிக்கவுண்டம்பாளையம், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, யாக சாலை பூஜைகளுடன் நேற்று துவங்கின. திருப்பூர், அங்கேரிபாளையம் அருகிலுள்ள, அவிநாசிக்கவுண்டம்பாளையம் விநாயகர், மாகாளியம்மன், பட்டத்தரசியம்மன், கருப்பராய சுவாமி, கன்னிமூல வலம்புரி விநாயகர் ஆகிய சுவாமிகள் மற்றும் குதிரை வாகனங்களுக்கு, நாளை காலை, கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை கணபதி ஹோமம், சுதர்சன, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் நடந்தன. அதன்பின், தீர்த்த கலசம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம், அனுப்பர்பாளையம் மாரியம்மன் கோவிலில் இருந்து துவங்கியது. ஏராளமான பெண்கள் முளைப்பாலிகை எடுத்தும், அலங்கரிக்கப்பட்ட கலசங்களும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோவிலுக்கு சென்றனர்.
நேற்று மாலை, முதற்கால யாக பூஜைகள் நடந்தன. இன்று காலை, இரண்டாம்கால யாக பூஜையும், மாலை, 5:00 மணிக்கு, வேதிகார்ச்சனை, பட்டுப்புடவை ஹோமம், சுமங்கலி பூஜை, நிறை வேள்வி உள்ளிட்ட மூன்றாம்காலயாக பூஜையும் நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு, விக்ரகங்கள் பிரதிஷ்டை, எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, காலை, 5:00க்கு, திருப்பள்ளி எழுச்சி, நான்காம் கால யாகபூஜையும், 7:00க்கு, நாடிசந்தானம், நிறை வேள்வி, மங்கள வேள்வியை தொடர்ந்து, தீர்த்தகலசங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை, 8:15 மணி முதல், 9:00 மணிக்குள், கோபுர கலசங்களுக்கும், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. அதன்பின், மகா அபிஷேகம், தசதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவையொட்டி, கோவில் பின், உள்ள ஏ.வி.பி., தோட்டத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.