பதிவு செய்த நாள்
03
ஜூன்
2017
12:06
திண்டுக்கல்: முழுமுதற் கடவுளாம் விநாயகனை வணங்கி சென்றால்,வெற்றிகள் நம்மை தேடி வந்து சேரும். அதனால் எல்லோருக்கும் செல்லமான தெய்வம் விநாயகர்தான்.
திண்டுக்கல்லிலும் கோபாலசமுத்திரம் கரையில் 108 விநாயகர் ஒரே இடத்தில் வீற்றிருந்து அருள் பாலிப்பது அவ்வூர் மக்களுக்கு தெரியும். மற்றவர்களுக்கு தெரியுமா?
அவர் மீது மக்கள் கொண்டுள்ள அன்பால் தற்போது 108 பவுனில் தங்கரதம் ஒன்று தயாராகிக் கொண்டிருப்பது எத்தனை பேருக்குத்தான் தெரியும்? இங்கு கடந்த 1967ல் நன்மை தரும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த 2001ல் 108 விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டன. கடந்த 2013ல் ஒரே கல்லிலான 32 அடி உயரமுடைய மகா சங்கடகர சதுர்த்தி விநாயகர் சிலையும் மிக நேர்த்தியாக, பிரம்மாண்டமாக உள்ளது.
இந்த கோயிலுக்குத்தான் தற்போது தங்கத்தேர் தயாராகி வருகிறது. 16 அடி உயரமுள்ள இத்தேருக்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே 45 பவுனில் மூன்றேகால் அடியில்
தங்கத்தினால் ஆன, உற்சவ மூர்த்தி தயாராக இருக்கிறார்.
இந்நிலையில் 108 பவுனில் தங்க ரதம் உருவாகிறது. தேர் பர்மா தேக்கு; சக்கரம் வேங்கை மரம்; இழுக்கும் பகுதி கருவேலமரம் என பலவகை பலகைகளால் தயாராகிறது. இதற்காக 350 கிலோ தாமிர தகடு, 220 கனஅடி பர்மா தேக்கு, 48 கன அடி வேங்கை மரம், 14 கனஅடி கருவேல மரம் வாங்கியுள்ளனர்.
ஸ்தபதி தியாகராஜன் கூறியதாவது: திருப்பதியில் உள்ளது போல இந்த தேர் வடிவமைக்கப்படுகிறது. திருவுலா உற்சவர், இரண்டு குதிரை, சாரதியாக செயல்படும் அருணன், அறுகோணத்தில் விநாயகர்கள் சிலைகள், நான்கு வெண் சாமரை பெண்கள், ஆறு
யாழிகள், ஆறு கந்தவர்கள், ஆறு விநாயகர், 12 மூஷிகம், ஆறு பூதம், 6 கர்ணகூடு உட்பட பல வேலைப்பாடுகள் இடம் பெறும், என்றார்.
கோயில் நிர்வாகி எம்.மருதநாயகம் கூறியதாவது: ரதம் 108 பவுனில் மிக பிரமாண்டமாய் வடிவமைக்கப்படுகிறது. விநாயகருக்கு நன்கொடையாளர்கள் தாராளமாக
உதவலாம், என்றார். இவரை பாராட்ட: 98421- 31524ல் தொடர்பு கொள்ளலாம்.