வடமதுரை: திண்டுக்கல் - திருச்சி நான்குவழிச்சாலையில் அய்யலுார்- தங்கம்மாபட்டி இடையே வண்டிகருப்பணசுவாமி கோயில் உள்ளது. இவ்வழியே வாகனங்களின் பயணிப்போர், தங்கள் வாகனங்களில் இருந்தவாறே, சுவாமிக்கு காணிக்கையாக காசுகளை எறிந்து செல்கின்றனர். இந்த காசுகளை சேகரித்து கொள்வதற்காக இந்துசமய அறநிலைய துறை சார்பில் ஆண்டு தோறும் ஏலம் விடப்படுகிறது. இத்துடன் கோயிலுக்காக உடைக்கப்படும் சிதறு தேங்காய்களை சேகரிக்கவும், வாகனங்கள் பாதுகாப்பு உரிமத்திற்கும் தனித்தனி ஏலம் நடக்கிறது. கடந்த முறை கோயில் வளாகத்தில் ஏலம் துவங்கியதும் கிராமமக்களில் சிலர், கோயிலுக்கு வருமானம் அதிகம் இருந்தும் அடிப்படை வசதிகளை அதிகாரிகள் செய்யாமல் அலட்சியம் செய்வதாக கூறி, ஏலம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து திடீரென நாற்காலியை உடைத்து ரகளை செய்தனர். அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் பாதுகாப்பு காரணங்களால் இந்தாண்டிற்கான ஏலத்தையும் தாடிகொம்பு பெருமாள் கோயிலில் நடத்தினர். இதில் எறிகாசு சேகரிக்கும் உரிமத்தை வடமதுரை மோகன்குமார் ரூ.7.15 லட்சத்திற்கும், சிதறு தேங்காய் சேகரிக்கும் உரிமத்தை அய்யலுார் மணி ரூ.1.66 லட்சத்திற்கும், வாகன பாதுகாப்பு உரிமத்தை குப்பாம்பட்டி வெள்ளைச்சாமிரூ.1.55 லட்சத்திற்கும் ஏலம் எடுத்தனர்.