திருச்சூர் பூரம் திருவிழா துவக்கம்: யானை மீது பவனி வந்த பகவதி அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2026 05:04
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.
கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் பூரம் திருவிழா பிரசித்தி பெற்றது. இன்று காலை 8:00 மணிக்கு நெய்தலைக்காவு பகவதி அம்மன் உருவச் சிலை குற்றூரில் இருந்து, ஆடை, ஆபரணங்கள் அணிந்த எர்ணாகுளம் சிவகுமார் என்ற யானை மீது, வடக்குநாதர் சன்னிதி நோக்கி புறப்பட்டார். செண்டை மேளத்துடன், வழித்தடத்தில் இருபுறமும் பக்தர்கள் அம்மனை தரிசிக்க திரண்டு வந்திருந்தனர். மதியம் 12:45 மணிக்கு மணிகண்டனால் பகுதியை வந்தடைந்த அம்மன், கணபதி கோவில் அருகே நின்றதும், செண்டை மேளம் முழங்கத் தொடங்கியது. அதே மேளதாளத்துடன் மணிகண்டனால் பகுதியிலிருந்து, அம்மன் வடக்குநாதரின் ஸ்ரீமூலஸ்தானத்திற்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து 01:30 மணிக்கு பகவதி அம்மன் வடக்குநாதர் கோவிலின் மேற்கு நடை வழியாக கோவிலுக்குள் வந்து, தெற்கு கோபுர நடவழியாக வெளியேறிய யானை, துதிக்கையை உயர்த்தி மூன்று நாள் பூரம் திருவிழாவை அறிவித்தது.
நாளை 26ம் தேதி காலை இதே கோபுர நடை வாயிலாக, உற்சவர் கணிமங்கலம் சாஸ்தா யானை மீது எழுந்தருளுவதுடன் தூரத்தில் முக்கிய நாளின் நிகழ்ச்சிகளுக்கு ஆரம்பமாகும். திருவிழாவின் சிறப்பு அம்சமான யானைகளின் அணிவகுப்பும், குடை மாற்றம் நிகழ்வும், இன்று மாலை நடக்கிறது. முன்னதாக, விழாவை முன்னிட்டு பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் மற்றும் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் நிர்வாகத்தினர் போட்டி போட்டு நடத்தும் யானைகளின் ஆடை, ஆபரண அலங்கார பொருட்களின் கண்காட்சியான "யானைச்சமயம்" நேற்று துவங்கியது. இதை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.