திருப்போரூர்: திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற கிருத்திகை விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, மாதம்தோறும் கிருத்திகை விழா கொண்டாடப்படுவது வழக்கம். அது போல, நேற்று ஆனி மாத கிருத்திகை விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இதில், கந்தசுவாமி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. விழாவிற்கு, சென்னை மற்றும் பல பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள், முடி காணிக்கை செலுத்தியும், காவடிகள் எடுத்தும் வேண்டுதல்களை நிறைவேற்றினர். விழாவையொட்டி, காலை, மாலை என இருவேளையும், மாட வீதிகளில் சுவாமியின் திருவீதியுலா நடைபெற்றது.