பதிவு செய்த நாள்
29
ஜூன்
2017
12:06
விடையூர் : விடையூர், செல்லியம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட விடையூர் கிராமத்தில் அமைந்துஉள்ளது, செல்லியம்மன் கோவில். இந்த கோவில் வளாகத்தில் கொள்ளாபுரியம்மன், வடபாதி செல்லியம்மன், கன்னியம்மன், ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் ஆகிய கோவில்களும் அமைந்துள்ளன. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக, கடந்த 26ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையும், கணபதி ஹோமமும், நவக்கிரக ஹோமமும், பூர்ணாஹூதியும் நடந்தது. அன்று மாலை, கும்பலங்காரமும், முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது. பின், மறுநாள் காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாத்துதலும், மாலை, மூன்றாம் கால யாகசாலை பூஜையும், நாடிசந்தனமும், விசேஷ திரவ்யாதி ஹோமமும் நடந்தது. மகா கும்பாபிஷேக நாளான நேற்று காலை, நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை 9:45 மணிக்கு கலச புறப்பாடும், அதை தொடர்ந்து முதலில் கொள்ளாபுரியம்மனுக்கு கும்பாபிஷேகமும், பின், செல்லியம்மன், வடபாதி செல்லியம்மன், அதை தொடர்ந்து ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின், இரவு செல்லியம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதிஉலாவும் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு, மண்டல பூஜை நடைபெறும்.