‘முருகன்’, முருகன் என்பது தமிழ் நாட்டில் வழங்குகிற வெகு சிறப்பான பெயர். “முருகன்” என்றாலும் அழகானவன் என்றும் இளமை நலம் மாறாத சவுந்தர்யம் வாய்ந்தவன் என்பதே அர்த்தம். அழகு என்றால் அது வெறும் சரீர அழகா? அருளின் அழகுதான் இப்படி தேக காந்தியாக வந்திருக்கிறது. பரமேஸ்வரன் அம்பாள் சம்பந்தத்தோடு இப்படிக் குமாரனாக ஆவிர்பவித்த போது வீரம், ஞானம், சவுந்தர்யம் இவற்றோடு அருளிலும் அதிகப் பிரகாசத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஸத்-சித்- ஆனந்தம் என்று சொல்வார்கள். அதுதான் பரம்பொருள். இதிலே ஸத் (இருப்பு) பரமேசுவரன், இருக்கிறோம் என்பதை உணர்ந்து சக்தியைக் காட்டுகிற ‘சித்’ அம்பாள்; இப்படி உணர்ந்ததில் பேரானந்தம் பிறக்கிறது. அந்த ஆனந்தமே சுப்ரமணியர். சிவம் என்கிற மங்களமும், அம்பாள் என்கிற காருண்யமும் கலந்த பரம உத்கிருஷ்டமான ஸ்தானம் அவர். சச்சிதானந்தத்தையே ‘சோமாஸ் கந்தர்’ என்று தமிழ் நாட்டுச் சிவன்கோயில்களில் எல்லாம் வைத்து உற்சவம் நடத்துகிறோம்.
ஈசுவரனுக்கும் அம்பாளுக்கும் நடுவே, இருவருக்கும் பொதுவான மத்ய ஸ்தானமாக சுப்பிரமணியர் குழந்தை ரூபத்தில் இருப்பார். உமையோடும், ஸ்கந்தனோடும் கூடியவர் (ஸஹ உமா ஸ்கந்தர்) தான் ஸோமாஸ்கந்தரான பரமேசுவரன், ‘பிள்ளையார்’ என்று விக்நேசுவரரையே சொல்கிற தமிழ் நாட்டிலும் இங்கே மட்டும் ‘குமரன்’ என்று சிறப்பிக்கப்படுகிற இளைய பிள்ளையை மட்டும் தாய் தந்தையரோடு வைத்து மூன்று மூர்த்தியாகச் செய்திருக்கிறார்கள். பிள்ளை என்றால் இவன் தான் என்று எல்லோரும் பெருமைப்படுகிற மாதிரி பிதாவே பெருமைப்பட்டு தோல்வியை ஒப்புக் கொள்கிற மாதிரி. இப்படி உத்தர அம்சங்கள் எல்லாவற்றிலும் உச்சமாக இருக்கிறார் சுப்ரம்மணியஸ்வாமி.