பதிவு செய்த நாள்
05
ஜூலை
2017
12:07
திருச்சி: பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று ஆனி திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, வரும் 7ம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஆனி திருமஞ்சனம் கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.
வைணவர்களுக்குக் கோயில் என்றால் திருவரங்கம். திருவரங்கத்து ரங்க ராஜர் முதன் முதலில் தமது திருமஞ்சனத்தை ராமாயண காலத்தில் விபீஷணர் மூலமாக செய்து கொண்டார். ராவண வதத்துக்குப் பிறகு நாடு திரும்பிய ராமர், பட்டாபிஷேகம் முடிந்ததும் தமது இஷ்வாகு வம்சத்தின் குலதெய்வமான ஸ்ரீரங்கராஜன் திருச்சிலையை விபீஷணனுக்கு அன்பின் நினைவாகக் கொடுத்தார். அந்தத் திருச்சிலையை எங்கேயும் கீழே வைத்து விடக் கூடாது என்ற நிபந்தனையுடன் பெற்றுக்கொண்ட விபீஷணன், அச்சிலையை தமது நாடான இலங்கையில் பிரதிஷ்டை செய்யும் ஆசையுடன் ஆகாய மார்க்கமாக புஷ்பக விமானத்தில் கிளம்பினான். அக்காலத்தில் காவிரியும் கொள்ளிடமும் ஓடும் நடுப்பகுதி ஒரு தீவாக இருந்தது. விபீஷணர் அங்கே நித்ய கர்மாக்களை முடித்து, காவிரியில் நீராட விரும்பினார். ராமர் கொடுத்த ஸ்ரீரங்கராஜன் திருச்சிலையை கீழே வைக்கக் கூடாது என்பதால், அதை ஒரு சிறுவனிடம் கொடுத்து, தாம் வரும்வரை அதை கீழே வைக்காமல் கைகளிலேயே வைத்திருக்கும்படி கேட்டுக் கொண்டார். அச்சிறுவன், ஒரு குறிப்பிட்ட காலகெடுவுக்குள் திரும்பி வரவில்லை யென்றால் அச்சிலையைக் கீழே வைத்து விடுவதாகக் கூறினான். குறித்த நேரத்தில் விபீஷணன் வராததால், ஸ்ரீரங்கராஜன் திருச்சிலையை சிறுவன் தரையில் வைத்து விட்டுச் சென்று விட்டான். விபீஷணன் எவ்வளவோ முயன்றும் சிலையை தரையிலிருந்து மீட்க முடியவில்லை. அதன் பின்பே சிறுவன் வடிவில் வந்தது விநாயகப் பெருமான் என்பது தெரிய வந்தது.
அன்றிரவு விபீஷணன் கனவில் வந்த ரங்க மன்னார், விபீஷணா, இத்திருவரங்கமே எனது இருப்பிடம் இங்கு பள்ளிகொள்வதே எனக்கு மிகவும் உகப்பானது என்று தமது விருப்பத்தைத் தெரிவித்தார். அதோடு, விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர், தாம் விபீஷணன் இருக்கும் தென் திசை இலங்கையை நோக்கி பள்ளி கொண்டருள்வதாகவும் உறுதியளித்தார். இறைவனின் திருவுளக்குறிப்பை உணர்ந்த விபீஷணன். ஸ்ரீரங்கராஜனுக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜை செய்ய விரும்பினான். காவிரியிலிருந்து நீர் கொணர்ந்து ஸ்வாமிக்கு திருமஞ்சனம் செய்வித்தான். பல வகை மலர்கள் கொண்டு அர்ச்சித்தான் இதுதான் திருவரங்கத்தில் ஸ்ரீரங்கமன்னருக்கு நடந்த முதல் திருமஞ்சனம் என்று பழம்பெரும் நூல்கள் குறிப்பிடுகின்றன.
அதன் பிறகு, அத்தேச மன்னன் தர்ம சோழன் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டான். இக் கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சீரமைத்து வழிபட்டதாக வரலாறு. சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்றான இக்கோயிலில், சயன காலத்தில் மூலவப் பெருமாள் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவர் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டு. ஒன்று ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் திருக்கோயில், இரண்டு திருச்சிறுபுலியூர். வட இந்தியாவிலிருந்து பெருமளவில் பக்தர்கள் வருகை தரும் வைணவ தலம் ஸ்ரீரங்கம். இந்தியாவில் அமைந்த பிரம்மாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்று. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது முதலாவது திவ்ய தேசம், மூலவர் ஸ்ரீரங்கநாதப்பெருமாள் 21 அடி நீளத்தில் பள்ளிகொண்ட கோலத்தில் கருவறையில் அருள்பாலிக்கிறார். கருவறையின் மேல் தங்க விமானம் ஜொலிக்கிறது. தங்க விமானத்தின் தென்புறம் பரவாசுதேவரின் தங்கச் சிலை பளபளப்புடனும் நேர்த்தியுடனும் விளங்குகிறது.
பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்ற இக்கோயில், 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது. பதினொரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற ஒரே தலம் இது ஒன்றுதான். இக்கோயிலுக்குச் சென்று வழிபட்டால் வறுமை அகலும். செல்வத்துக்கு அதிபதியான சுக்ரனே நேரில் வந்து நமக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். இதனாலேயே இது, சுக்ர தலம் என பெயர் பெற்றது.
மூலவர் அரங்கநாதப் பெருமாளுக்கு அபிஷேகம் கிடையாது. உத்ஸவருக்குத்தான் அபிஷேகம். எல்லாக் காலங்களிலும் பக்தர் கூட்டம் நிரம்பி வழியும் ஸ்ரீரங்கத்தில் ஆனித் திருமஞ்சனம் மிகவும் பிரசித்தமானது. இருபது வெள்ளி, தங்கக் குடங்களில் காவரி நீரை நிரப்பி யானை மீது வைத்துக் கொண்டு வந்து திருமஞ்சம் செய்வர். அரங்கனுக்கு அபிஷேகம் காவிரி நீர் மட்டுமல்ல. பால், தயிர், நெய், பன்னீர், தேன், இளநீர் என்று அரங்கனின் பச்சைக் கற்பூரம் சாற்றிய திருமேனியில் அபிஷேகம் நடைபெறும். திருமஞ்சனத்துக்கு முன்பு உத்ஸவரின் வெள்ளிக் கவசங்களை நீக்கி விடுவர். அச் சமயம் அரங்கனின் திருமேனியைத் தீண்டிய கவசங்களை பக்தர்கள் வாங்கித் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்வர். திருமஞ்சனம் பார்க்க வருபவர்கள் பால், தேன், பன்னீர் போன்ற பொருட்களை அளிப்பர். திருமஞ்சனம் முடிந்து கவசம் சாத்தும்போது, சின்னச் சின்னப் பைகளில் குங்குமப்பூவை அடைத்து கலசத்தை அதனுடன் இணைத்து சாத்துவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.
அரங்கன் அலங்காரப் பிரியன் அல்லவா? அபிஷேகம் முடிந்ததும், முத்தங்கி, ரத்னங்கி சாத்திக் கொண்டு சர்வாலங்கார பூஷிதராக நறுமண மலர்களுடன், அணிகலன்களை அணிந்து சேவை சாதிப்பார் பெருமாள். அன்றைய திருமஞ்சன அபிஷேகத் தரிசனத்துக்குப் பிறகு மீண்டும் தரிசனம் கிடையாது. இந்த தரிசனத்தைக் காண்பதால், திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நிச்சயமாகும். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். மகப் பேறு இல்லாதவர்களுக்கு மக்கட் செல்வம் கிடைக்கும்.
கங்கையில் புனிதமாய காவேரி நடுவுபட்டு
பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம்
என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடிய மாதிரி, அரங்கனின் ஆனித் திருமஞ்சனத்தை கண்குளிரத் தரிசித்து வேண்டிய பலன்களை அடைவோம்.