பதிவு செய்த நாள்
05
ஜூலை
2017
12:07
மைசூரு: “இந்தாண்டு மைசூரு தசரா விழா, செப்., 21 முதல், 30 வரை உலக தரத்துக்கு கொண்டாடப்படும்,” என, மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் எச்.எஸ்.மகாதேவப்பா தெரிவித்தார். உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவை இந்தாண்டு கொண்டாடுவது குறித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எச்.எஸ்.மகாதேவப்பா, மைசூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பாரம்பரிய முறை : கலெக்டர் ரந்தீப், நஞ்சன்கூடு காங்., - எம்.எல்.ஏ., கேசவமூர்த்தி, மைசூரு மாநகராட்சி மேயர் ரவிகுமார் உட்பட, முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தசராவுக்கு மூன்று மாதங்கள் இருக்கும்போதே, கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு தசராவை பாரம்பரிய முறைப்படி நடத்த அரசு முடிவு எடுத்துள்ளதால், அதற்கான பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பின், மகாதேவப்பா கூறியதாவது: தசரா விழா நடத்துவது குறித்து முதல்வர் சித்தராமையா, இம்மாதம் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். உலக தரத்துடன் விழா நடத்தப்படும். வானிலை ஆய்வு மையம் அதிகாரிகளின் தகவல்படி, இந்தாண்டு, 98 சதவீதம் மழை பெய்யும். இதன் மூலம் அனைத்து அணைகளும் நிரம்பும் என்ற நம்பிக்கையுள்ளது.
நிரந்தர சின்னம்: செப்டம்பர், 21 முதல், 30 வரை, உலக தரத்துக்கு தசரா விழா கொண்டாடப்படும். தசரா ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகள், ஆகஸ்ட், 10ம் தேதி ஹுன்சூரின் வீரனஹொசஹள்ளி வனப்பகுதியிலிருந்து மைசூருக்கு அழைத்து வரப்படும். மேலும், தசராவுக்கென்று நிரந்தரமான சின்னத்தை தயாரிக்கும் யோசனை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.