பதிவு செய்த நாள்
24
ஜூலை
2017
10:07
ராமேஸ்வரம்: ஆடி அமாவாசை யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் திதி பூஜை செய்து, புனித நீராடினார்கள். நேற்று ஆடி அமாவாசை யொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்ராமநாதசுவாமி கோயிலுக்கு தமிழகத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பின் கோயில் அக்னி தீர்த்த கடலில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி திதி பூஜை செய்தனர். ராமநாதசுவாமி கோயிலில் இருந்து தங்க கருட வாகனத்தில் ஸ்ரீராமர், சீதா, லெட்சுமணருடன் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். பின் கோயில் குருக்கள் ராமருக்கு மகா தீபாரதனை நடத்தி, அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு தீர்த்த வாரி கொடுத்தார்.இதையடுத்து பக்தர்கள் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி சிவ சிவ என கோஷமிட்டபடி அக்னி கடலில் மூழ்கி புனித நீராடினர். பின் கோயிலினுள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடவும், சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பரிதவித்த பக்தர்கள் : அமாவாசையோட்டி 6 ஆயிரம் வாகனங்கள், ரயில், அரசு பஸ்கள் மூலமாக 2 லட்சத்துக்கு மேலான தமிழக பக்தர்கள் குவிந்தனர். அக்னி தீர்த்த கடற்கரை, கோயில் நான்கு ரதவீதி, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. போதுமான கார் பார்க்கிங் வசதியில்லாமல் மதுரை, ராமேஸ்வரம், தனுஷ்கோடி தேசிய சாலை இருபுறமும் 3 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் நிறுத்தினர். பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் அன்னதானம் செய்தனர். ஆனால் இந்தாண்டு அதிகளவு பக்தர்கள் கூட்டம் இருந்ததால் உணவு, குடிநீர் கிடைக்காமல் தவித்தனர். இக்கூட்ட நெரிசலை பயன்படுத்தி, சில லாட்ஜூகளில் அறைகளின் வாடகையை 2 மடங்கு அதிகமாக ரூபாய் 3 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர்.