பதிவு செய்த நாள்
24
ஜூலை
2017
05:07
பாரத நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் பல மகான்கள் தோன்றிய வண்ணமிருக்கிறார்கள். ஆனால், ஒரு திசையில் தோன்றி மற்றொரு திசையில் ஊன்றிப் புகழ்கொண்டவர்கள் அதிகமில்லை. அந்த வரிசையில் தெற்கிலிருந்து வடக்கே சென்று தன்னுடைய ஆன்மிக உயர்வாலும், சமூகத் தொண்டாலும் உலகளாவிய மதிப்பைப் பெற்றவர் சுவாமி சிவானந்தர். தமிழ்நாட்டின் ஜீவநதி தாமிரபரணி. அது பாய்ந்தோடும் பத்தமடையில் பிறந்து, பாரதத்தின் ஜீவநதியான கங்கைக் கரையில் ரிஷிகேஷத்தில் ஆசிரமம் அமைத்து தெய்வ நெறிக் கழகம் என்னும் அற்புதமான அமைப்பை ஏற்படுத்தி வையத்தை வாழ்விக்க வந்தவர் சுவாமி சிவானந்தர். வேம்பு ஐயரின் மகனாகப் பிறந்து குப்புசாமி என்னும் பெயர் சுமந்து எட்டயபுரம் பள்ளியில் படித்தார். சங்கீத மும்மணிகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர், பாரதியார், குப்புசாமி எல்லோரும் எட்டயபுரத்தில் வாழ்ந்தவர்கள் என்பது ஆனந்தமான சேதி.
தஞ்சையில் மேற்படிப்புப் படித்து மருத்துவரானபோது தந்தை இறந்து போனார். குடும்ப பாரத்தைத் தாங்க வேண்டிய கட்டாய நிலையில் நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் மலேசியா சென்றார். கட்டுறுதி யுள்ளவுடல் கண்ணிலே நல்லகுணம்,ஒட்டுறவே நன்றாய் உரைத்திடுஞ் சொல் என்று கண்ணன் பாட்டில் பாரதி வர்ணிப்பார். இந்தச் சொற்களுக்கு இலக்கணமாக இருந்தார் குப்புசாமி.
சிறு வயதிலிருந்தே பகிர்ந்துண்பது, சிரமப்படுவோருக்கு உதவி செய்வது, ஜாதி வேறுபாடு இல்லாமல் பழகுவது, ஓயாமல் உழைப்பது, இன்முகத்தோடு இருப்பது, ஊக்கமும், மகிழ்ச்சியும் ஏற்படும் விதமாக பேசுவது, இக்கட்டான சூழ்நிலையையும் நகைச்சுவையாக மாற்றுவது போன்ற குணங்கள் அவருக்கு இயல்பாக வாய்த்திருந்தன. எனவே மருத்துவத்துறை, அவருக்குக் கச்சிதமாகப் பொருந்தியது. மூன்று மருத்துவமனைகளை ஒரே நேரத்தில் திறம்பட நிர்வகிக்கும் ஆற்றலும், நோயாளிகள் அவரைக் கைராசிக்காரர் என்று கருதியதும், அவருடைய இனிய அணுகுமுறையும், நேர்மையும் அவருக்கு சமுதாயத்தில் பெரும் மதிப்பை ஏற்படுத்தின.
இங்கிலாந்தில் இருந்த புகழ்பெற்ற மருத்துவ சங்கங்கள் அவரைச் சிறப்பு உறுப்பினராக ஏற்று கவுரவித்தன. ஆனால் அவரது மனம் வேறு எங்கோ சிந்தித்தது. உடலை மருத்துவம் கவனித்துக் கொள்ளும். உள்ளத்தைக் கல்வி பார்த்துக் கொள்ளும். ஆனால் அவற்றைத் தாண்டி இருக்கும் உணர்வை எதைக்கொண்டு சீராக்குவது, அறியாமையில் தவிப்பவர்களுக்கு எப்படி உதவுவது என்று சிந்திக்கலானார். ஆன்மிக நாட்டம் அவரை பற்றிக்கொண்டது. விளைவு... தன் 36ம் வயதில் அவர் பாரதம் திரும்பினார். காசி, பண்டரிபுரத்துக்கு யாத்திரை சென்றார். மலேசியாவில் மருத்துவராக இருந்தபோது போதுமான அளவு பொருளீட்டி, வருவோருக்கெல்லாம் வாரி வழங்கிய வள்ளல், பிறர் கொடுத்ததை உண்டு, கிடைத்த இடத்தில் படுத்துறங்கி எளியவராக வாழ்ந்தார். சுவாமி விசுவானந்த சரஸ்வதி என்னும் பெரியவரிடம் துறவற தீட்சை பெற்று, சிவானந்த சரஸ்வதி என்னும் திருநாமம் ஏற்றார். ரிஷிகேஷ் சென்று ஆன்மிகப் பயிற்சிகளில் ஆழ்ந்தார். சாதுக்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் கங்கைக் கரையில் பலரும் ரொட்டிகளை அளிப்பார்கள்.
உயர்கல்விகற்று, பெரும் மருத்துவராக விளங்கிய அவர், அவர்களுடன் வரிசையில் நின்று ரொட்டிகளைப் பெற்றுக் கொள்வார். தியான நேரத்தில் ஓர் இடைவெளி ஏற்படும்போது அவற்றில் கொஞ்சம் உண்பார். தொட்டுக்கொள்ள? கங்கைத் தண்ணீர்! ஆமாம், கங்கைக் கரையில் அமர்ந்து அந்த நீரில் ரொட்டியைத் தோய்த்துத் தோய்த்து உண்பார்.
பிறகு அங்கேயே ஒரு மருத்துவ மையத்தை நிறுவி, இலவசமாகச் சிகிச்சை அளித்தார். தான் சம்பாதித்திருந்த பணம் அனைத்தையும் எளியவர்களுக்குச் சேவை புரிவதிலேயே செலவாக்கினார். இந்தப் பணியின் விரிவாகவே சிவானந்தரின் ஆஸ்ரமம் எழுந்தது. மருத்துவம், கல்வி, ஆன்மிகப் பயிற்சி, அன்னதானம் என நற்பணிகள் கொழிக்கும் கூடமாக அது விளங்கியது.
ஆன்மிக மருத்துவராக நடந்துகொண்ட சிவானந்தர், தன்னைப் பார்க்க வருவோரின் கேள்விகளுக்கு பல அரிய உண்மைகளை வெளிப்படுத்தினார். வேதாந்தம் என்பது வீட்டிற்குள் இயல்பாக வரவேண்டும் என்று விழைந்த அவர் 300 நுால்களை எழுதினார்.
தத்துவங்கள் பற்றி வாய்ப்பந்தல் போடுவதைக் காட்டிலும், நடைமுறையில் கடைபிடிக்க வேண்டிய எளிய விஷயங்களே மிகவும் முக்கியமானவை என்று உறுதியாக நம்பினார். அவருடைய பொன்மொழிகளெல்லாம் எளிமையாகவும் நாம் கடைபிடிக்கத் துாண்டும் வண்ணமும் இருக்கும்.
எடுத்துக்காட்டாக
* அதிகாலையில் எழுந்திருங்கள். சிறிது நேரமாவது தியானம் செய்யுங்கள்.
* வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை தர்மம் செய்யுங்கள்.
* தினமும் இரண்டு மணி நேரம்
மவுனமாக இருங்கள்.
* வாழ்வில் எளிமை, சிந்தனையில் உயர்வு என்பதே உங்கள் லட்சியமாக இருக்கட்டும்.
* உங்களை, அடிக்கடி சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
* தேவைப்பட்டால் பேசுங்கள். மற்ற நேரத்தில் அமைதியைக் கடைபிடியுங்கள்.
* எந்த நிலையிலும் உண்மை பேசுங்கள். இனிமையாக பேசுவது அவசியம்.
* எதிர்பார்ப்பு இன்றி சேவைகளைச் செய்யுங்கள்.
* போலித்தனத்தை கைவிடுங்கள்.
* திறந்த மனதுடன் மற்றவர்களிடம் பழகுங்கள். எண்ணம், செயலில் நேர்மையைப் பின்பற்றுங்கள்.
உடலை உறுதிசெய்வது, உள்ளத்தை ஒழுக்கத்தின் மூலம் தூய்மை செய்வது, ஊர் நலனுக்காக உழைப்பது, உலகைப் படைத்துக் காக்கும் பரமனின் நினைப்பில் வாழ்வது... இது தான் அவர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை. கங்கை நதி ஓடும் வரையிலும், சுவாமி சிவானந்தரின் புகழைப் பாடித்தான் சலசலத்துக் கொண்டிருக்கும்.