ஸ்ரீவில்லிபுத்தூர் கோதை ஆண்டாள் கண்ணனை ஆண்டாள் இன்று ஆடிப்பூரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2017 02:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: நந்தவனத்தில் பெரியாழ்வார் ஆடிப்பூர நன்னாளில் துளசி மாடத்தின் அடியில் தெய்வக் குழந்தை கிடப்பதைக் கண்டார். அவளுக்கு கோதை என பெயரிட்டு வளர்த்தார். தந்தையிடம் கண்ணனின் வரலாறு கேட்டு மகிழ்ந்த கோதை, பருவ வயதில் அவன் மீது காதல் கொண்டாள். தினமும் பூமாலையை தன்
கூந்தலில் சூடி, கண்ணனுக்கு தான் பொருத்தம் தானாஎன மனதிற்குள் மகிழ்ந்தாள். தான் சூடிய மாலையைக் களைந்து பெரியாழ்வாரிடம் பூஜைக்கு கொடுத்து வந்தாள். ஒருநாள் பெரியாழ்வார் மாலையில், முடி இருப்பது கண்டு அதிர்ந்தார். வேறொரு மாலையை சுவாமிக்கு சூட்டி வழிபட்டார். ஆனால் கோதை அணிந்த மாலையே தனக்கு விருப்பமானது என சுவாமி தெரிவித்தார். இதனால் கண்ணனின் மனதை ஆள்பவள் என்னும் பொருளில் கோதை ஆண்டாள் என பெயர் பெற்றாள். ஆழ்வாரும் மகளை மானிடருக்கு மணம் முடிக்காமல் காத்திருந்தார். சுவாமி தம் இருப்பிடமான ஸ்ரீரங்கத்திற்கு ஆண்டாளை அழைத்து வருமாறு பெரியாழ்வாருக்கு உத்தரவிட்டார். அங்கு ஆண்டாள் இறைவனோடு இரண்டறக் கலந்தாள். ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ரங்கமன்னாருடன் திருமணக்கோலத்தில் ஆண்டாள் அருளாட்சி புரிகிறாள். ஆடிப்பூரத்தை ஒட்டி நாளை இங்கு ஆடிப்பூர தேர்த்திருவிழா நடக்கிறது.