பதிவு செய்த நாள்
27
ஜூலை
2017
11:07
சின்னாளபட்டி, ஆடிப்பூரத்தை முன்னிட்டு திரு வி.க.,நகர் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வளைகாப்பு விழா நடந்தது. இங்கு ஆடிப்பூர திருவிழா நேற்று காலை, சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது. பக்தர்கள் பலவகை பழங்கள், கற்கண்டு, கருப்பட்டி, மற்றும் பதார்த்த சீர்வரிசைகளுடன், பாரதிநகர் விநாயகர் கோயிலுக்கு சென்றனர். சிறப்பு பூஜைக்குப்பின், ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். கோயில் முன்பு கர்ப்பிணிகள், திருமண வரம் வேண்டும் பெண்கள் அமர்ந்திருந்தனர். அம்மனுக்கு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் போன்ற 7 வகை சாதங்களை படையல் செய்தனர். அபிஷேக, ஆராதனைக்குப்பின், அம்மனுக்கு வளையல் பூட்டுதல் நடந்தது. கர்ப்பிணி பெண்கள் முகத்தில் சந்தனம் பூசி, வளையல் அணிவித்து குருக்கள் இளையராஜா வளைகாப்பை துவக்கி வைத்தார். கீழக்கோட்டை மாரியம்மன் கோயில், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலிலும் திருமஞ்சன அபிஷேகம், மலர் அலங்காரம், வாலை, திரிபுரை சக்தி அம்மனுக்கு ஆடிப்பூர சிறப்பு ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் திருவிளக்கேற்றி வழிபட்டனர்.