பதிவு செய்த நாள்
29
ஜூலை
2017
12:07
ரிக், சுக்ல யஜுர் வேதத்தினர் நேற்று, ஆவணி அவிட்டம் அனுஷ்டித்து, பூணுால் மாற்றிக் கொண்டனர்.ஆவணி அவிட்டம் என்னும் ஆண்டுச் சடங்கு, உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள், ஆடி அல்லது ஆவணி மாதங்களில், அவிட்டம் நட்சத்திரத்தினோடு கூடிய பவுர்ணமியில் கடை பிடிக்கும் வழிபாடு. இது ரிக், யஜுர் வேதிகள் கொண்டாடும் தினம். சாம வேதிகள், விநாயகர் சதுர்த்தி தினத்தில் கொண்டாடுவர். இந்நாளில், அனைவரும் ஆற்றங்கரையிலோ, குளக்கரையிலோ குளித்து, இத்தகைய சடங்கை உருவாக்கியவர்களுக்கு நன்றி கூறி, தர்ப்பணம் செய்வர். தந்தை இல்லாதோர், மூதாதையருக்கு எள், அரிசி, நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர். பின், புதுப் பூணுால் அணிந்து, வேதங்களைப் படிக்கத்தொடங்குவர். இந்த சடங்கு, சமஸ்கிருதத்தில், உபாகர்மா என அழைக்கப்படுகிறது. இதன் பொருள் துவக்கம் என்பதாகும்.இந்தாண்டு, ஆவணி அவிட்டத்தன்று, சந்திர கிரஹணம் வருவதால், அன்று, ஆவணி அவிட்டத்தை நடத்துவது குறித்து, சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, வைணவர்கள், மற்றவர்கள் என இரு தரப்பாக, ஆவணி அவிட்டம் அனுஷ்டிக்க முடிவானது.அதன் படி, ரிக், சுக்ல யஜுர்வேதிகள் நேற்று, ஆவணி அவிட்டம் அனுசரித்தனர். இதை முன்னிட்டு, சென்னை நகரில் கோவில்கள், நீர் நிலைப் பகுதிகளில், பூணுால் மாற்றும் சடங்கு நடந்தது.இந்தாண்டு, வைணவர்கள், மற்றவர்கள் என தனித்தனியாக நான்கு முறை ஆவணி அவிட்டம் அனுசரித்தாலும், காயத்திரி ஜபம் மட்டும், ஆக., 8ல், ஒரே நாளில் நடத்தப்படுகிறது. - நமது நிருபர் -