பதிவு செய்த நாள்
02
ஆக
2017
01:08
நரசிங்கபுரம்: மழை பெய்ய வேண்டி, கன்னி பெண்கள், வீடு வீடாக சென்று, யாசகம் (பிச்சை) எடுத்து வந்து, சாப்பாட்டை முச்சந்தியில் வைத்து, ஒப்பாரி வைத்து பூஜை செய்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர், நரசிங்கபுரம் சுற்று வட்டார பகுதிகளில், பருவமழை பொய்த்து போனதால், வசிஷ்ட நதி, சுவேத நதி, அணை, ஏரி, குளம், விவசாய கிணறு உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு விட்டன. இந்நிலையில், நேற்று மாலை, 6:00 மணியளவில், நரசிங்கபுரத்தை சேர்ந்த, கன்னி பெண்கள், வீடு வீடாக சென்று, யாசகம் (பிச்சை) எடுத்து வந்து, சாப்பாட்டை அப்பமசமுத்திரம் வழியாக செல்லும் வசிஷ்ட நதி குறுக்கே, புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் வைத்து பூஜை செய்தனர். இரவு, 8:00 மணியளவில், 200க்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் உள்ளிட்டோர், பாலத்தில் மழை வேண்டி ஒப்பாரி வைத்து அழுதனர். வருண பகவான் சுவாமிக்கு வழிபாடு செய்தனர். படையல் வைக்கப்பட்ட உணவுகளை, பொதுமக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. வினோத பூஜையில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், நேற்று இரவு, ?:?? மணியளவில், ஆத்தூர் பகுதியில் மழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.