மீனாட்சி அம்மன் கோயில் ஆடி விழா அம்மனுக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2017 12:08
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி பெருக்கை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பொற்றாமரைக்குளத்தில் குழுமிய பெண்கள் தங்களின் மஞ்சள் தாலிக் கயிற்றை புதுப்பித்தனர்.இக்கோயிலில் நடக்கும் விழாக்களில் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், புரட்டாசி நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய்க்காப்புத் திருவிழா ஆகியவை முக்கியமானவை.
ஆடி முளைக்கொட்டுத் திருவிழா கொடியேற்றம் ஜூலை 25ல் நடந்தது. இதைமுன்னிட்டு மீனாட்சி அம்மன் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள் பாலித்தார். நிறைவு நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. புதுமண தம்பதிகள் ஏராளமானோர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். பொற்றாமரைக்குளத்தில் குழுமிய பெண்கள் தங்களின் மஞ்சள் தாலி கயிற்றை புதுப்பித்து கொண்டனர். மண மாலைகளை வைகை ஆற்றில் விட்டனர். கோயில் சார்பில் கட்டணம், கட்டணமில்லா தரிசனத்துக்கான சிறப்பு வழித்தடங்கள், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இரவு 7:00 மணிக்கு கனக தண்டியல் வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் ஆடி வீதிகளில் வலம் வந்து அருள் பாலித்தார். பொற்றாமரைக் குளக்கரையில் தீர்த்தவாரியுடன் விழா நிறைவுற்றது.விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்திருந்தனர்.