பதிவு செய்த நாள்
04
ஆக
2017
01:08
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், கோட்புலி நாயனார் மற்றும் கலிய நாயனார் குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. சோழ நாட்டில், நாட்டியத்தான் குடியில் பிறந்தவர், கோட்புலி நாயனார். சிவத்தொண்டரான அவர், சோழ மன்னனின் படைத்தலைவராக பணியாற்றி வந்தார். தனக்கு கிடைத்த நிதி மூலம், இறைவனுக்கு திருவமுது படைப்பதற்காக, நெல் வாங்கி வீட்டில் மலை போல் குவித்து வைத்து, கோவில்களுக்கு வழங்கி வந்தார். ஒருமுறை, அரச கட்டளையை ஏற்று போர்க்களத்துக்கு புறப்பட்டார்; நெல்லை கூடு கட்டி வைத்து, இறைவனுக்கானது; யாரும் எடுக்கக் கூடாது என, உறவினர்களிடம் கூறியுள்ளார். நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டு, பசியால் வருந்திய சுற்றத்தார், இறைவனுக்கு வைத்திருந்த நெல் மூலம் அமுதுண்டு, அதை செலவழித்துள்ளனர். நாடு திரும்பி கோட்புலியார், சுற்றத்தாரின் செயலை அறிந்து அதிர்ந்தார். சுற்றத்தார்களுக்கு தகவல் அளித்து, அவர்கள் அனைவரையும் வர வழைத்து, குழந்தைகள் உட்பட வாளினால் வெட்டி கொன்றார். அப்போது எழுந்தருளிய சிவபெருமான், "தம்முடன் இணைவாய் என்று பெருவாழ்வு அளித்து மறைந்தார்.
கலிய நாயனார்: திருவொற்றியூர் சங்கரப்பாடி தெருவில், எண்ணை வணிகம் செய்து வந்தவர், கலியனார். தமது செல்வத்தை, திருப்பணி களுக்கு செலவிட்டு வந்தார். படம்பக்க நாதர் கோவிலில், உட்புறமும், வெளிப் புறமும் உள்ள, ஆயிரக்கணக்கான விளக்குகளுக்கு தினமும், எண்ணை ஊற்றி, பராமரிக்கும் பணி செய்து வந்தார். கலிய நாயனாரது பக்தியின் சிறப்பை உலகுக்கு உணர்த்த எண்ணிய சிவபெருமான், அவருக்கு வறுமையை தோற்று வித்தார். வறுமையை பெருமையாக நினைத்து, பொருள், வீடு என அனைத்தையும் விற்று, இறுதியில் மனைவியை விற்க துணிந்தார். அவரது மனைவியை யாருமே விலைக்கு வாங்காததால், திருப்பணி தொடர முடியவில்லை. "எண்ணை இல்லாவிட்டால் என்ன; விளக்கு ஏற்ற என் உதிரம் தருவேன் என்று கூறி, விளக்குகளை வரிசையாக அடுக்கி, அதில் கழுத்தை அறுத்து விளக்கில் ரத்தம் விழ செய்தார். அப்போது, கோவில் முழுவதும், விளக்குகள் பிரகாசமாக எரிந்தன. பார்வதியுடன் சிவபெருமான் காட்சியளித்து, கலிய நாயனார், அவ ரது மனைவிக்கு சிவபதம் கிடைக்க,அருள் புரிந்தார். திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், கோட்புலி நாயனார் மற்றும் கலிய நாயனார் ஆகியோருக்கு, அர்த்தசாம பூசை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.