பதிவு செய்த நாள்
04
ஆக
2017
01:08
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், நீர் நிலைகளுக்கு வழிபாடு செய்து, ஆடிப்பெருக்கு விழா, உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விவசாயத்துக்கும், வாழ்க்கைக்கும் ஆதாரமாக உள்ள, நதிகளை வணங்கும் விழாவாக, ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. "ஆடிப்பட்டம் தேடி விதைக்கும் விவசாயிகள், பருவ மழை பெய்து, கரைபுரண்டு ஓடும் புது வெள்ளத்தை வணங்கும் நிகழ்வான, ஆடிப்பெருக்கு விழா, நேற்று கொண்டாடப்பட்டது. அமராவதி ஆற்றில் தற்போது தண்ணீர் வருவதால், விழா களை கட்டியது. ஆற்றின் கரையில், பெண்கள், பசுஞ்சாணமிட்டு, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்தும், தெய்வ வழிபாட்டை தொடரும் வகையில், முன்னோர்களை வழிபடும் கன்னிமார் பூஜை செய்தும், சுவாமிக்கு படையல் வைத்து வழிபாடு செய்தனர். புதுமண தம்பதிகள், தாலி மாற்றியும், கன்னி பெண்கள் நல்ல வாழ்க்கை அமைய வேண்டியும் வழிபாடு செய்தனர். சிறுவர்கள், இளம் பெண்கள், ஆண்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடியும், ஆடிக்காற்றை கொண்டாடும் வகையில், மரங்களில் தூரி கட்டி, பெண்களும், குழந்தைகளும் விளையாடி மகிழ்ந்தனர்.
ஆடிப்பட்ட சாகுபடியை துவக்குவதற்கு முன்பு, தானியங்களால் முளைப்பாலிகை இட்டு, நேற்று ஆற்றில் கொண்டு வந்து விட்டும், வழை இலை களில், அகல் விளக்கு வைத்து, ஆற்றில் விட்டும், வேளாண்மையும், மகிழ்ச்சியும் பொங்க வழிபாடு செய்தனர். முன்னோர்களை வழிபடும் வகையில், நீர் நிலைகளில் முன்னோர் களுக்கு "திதி கொடுத்தும் வழிபட்டனர். தாராபுரம் அகத்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட ஆற்றின் கரையோரம் உள்ள கோவில்களிலும், பிற கோவில்களிலும், ஆடிப்பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆடி பெருக்கை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல கோவில்களிலும், சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில், பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.