காரைக்கால்: காரைக்கால் அரசலாற்றில் நேற்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. காவிரியின் கடைமடை பகுதியான காரைக்காலில் அரசலாறு, வாஞ்சியாறு, திருமலைராயனாறு ஆகிய கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா நேற்று நடந்தது. தமிழகத்தில் காவிரி உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் இல்லாத நிலையில், காரைக்காலில் தடுப்பணை மூலம் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. அதிகாலையில் குடும்பத்துடன் ஆற்றங்கரைக்கு வந்த புதுமண தம்பதிகள், புத்தாடை அணிந்து பூஜை செய்து காவிரியை வணங்கி, திருமண மாலையை ஆற்றில் விட்டனர். புதிய தாலிக் கயிறும் மாற்றிக் கொண்டனர்.