திருப்புவனம்: திருப்புவனம் அருகே நயினார்பேட்டை மந்தையம்மன் கோயிலில் மழைவேண்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். கடந்த 5 ஆண்டு காலமாக போதிய மழை இல்லாததால் விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது. இந்தாண்டும் மழை பெய்யாவிட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடும் போராட்டமாகி விடும். கிராமப்புறங்களில் மழை வேண்டி பல்வேறு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். நயினார்பேட்டை கிராமத்தில் மழை வேண்டி முளைப்பாரி உற்சவம் நடந்தது. முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 21ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. முளைப்பாரி போடப்பட்டு நேற்று முன்தினம் 300க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை சுமந்து வந்து முளைப்பாரி திண்ணையில் க்கி வைத்து வழிபட்டனர். பின் முளைப்பாரியை கண்மாயில் கரைத்தனர். நேற்று முன்தினம் திருப்புவனம் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் மழை வேண்டி முளைப்பாரி உற்சவம் நடந்தது. மாலை மழை வெளுத்து கட்டியது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.