திருநெல்வேலி: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித் தபசுத்தேரோட்டம் விமரிசையாக நடந்தது. சங்கரன்கோவில், சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா கடந்த மாதம் 27ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கோமதி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன.
இரவில் வீதியுலா நடந்தது. கோயில் மண்டபத்தில் தினமும் இன்னிசை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிகள் நடந்தன. 7 ஆம் திருநாளில் புதன்கிழமை மாலை கோமதிஅம்மன் மண்டகப்படிக்கு எழுந்தருளினார்.அங்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள்நடைபெற்றன. இதையடுத்து கோமதிஅம்மன் பூக்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூம்பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்தார். 8ம் திருநாளான வியாழக்கிழமை காலை 9 மணிக்கு அம்பாள் வீணாகானம் செய்தல் அலங்காரத்துடன் காட்சியளித்தார். இரவு வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். 9ம் திருநாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடந்தது. காலை 5 மணியளவில் கோமதி அம்மன் தேரில் எழுந்தருளினார். காலை 9 மணியளவில் தேரோட்டம் நடந்தது. சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர், ஆதிதிராவிட அமைச்சர் ராஜலட்சுமி, கலெக்டர் சந்தீப் நந்துõரி ஆகியோர் தேர் வடம் பிடித்து இழுத்தனர். பிற்பகலில் நிலையம் வந்தது. முக்கியத் திருவிழாவான ஆடித்தவசுக் காட்சி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இரவுக் காட்சி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகிறது.