பதிவு செய்த நாள்
04
ஆக
2017
03:08
மதுரை: ஆடி வெள்ளி, வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம்,பூஜைகள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
வரலட்சுமி விரதம், ஆடி வெள்ளியை முன்னிட்டு, கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு , அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,பூஜைகள் செய்யப்பட்டு, அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை முதல் பெண் பக்தர்கள் அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி , வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். வரலட்சுமி விரதத்தை ஒட்டி கோவை புலியகுளம் மாரியம்மன் கோவிலில் வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி, சேலம் மேச்சேரி பத்ரகாளியம்மன், கோவை புலியகுளம் மகாலட்சுமி அம்மன், புலியகுளம் வன பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி கோவை சௌரிபாளையம் மகாலட்சுமி அம்மன் கோவிலில் 1008 கலச பூஜை நடந்தது. கோவை கெம்பட்டி காலனி குண்டத்து பக்கிர காளியம்மன் கோவிலில் ஸ்ரீ சக்கர அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதேபோல், கோவை சௌரிபாளையம் மகாலட்சுமி அம்மன் தாமரை அலங்காரத்திலும், பழநி நேதாஜிநகர் விஷ்ணு துர்க்கைக்கு வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டும், கோவை கெம்பட்டி காலனி எல்.ஜி., தோட்டத்திலுள்ள முத்துமாரியம்மன் கனி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவை டி.கே., மார்க்கெட்டில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.