சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித் தபசுத் தேரோட்டம் நடந்தது. சங்கரன்கோவில், சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா ஜூலை 27ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கோமதி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. இரவில் வீதியுலா நடந்தது. கோயில் மண்டபத்தில் தினமும் இன்னிசை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிகள் நடந்தன.விழா நாட்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார். 9ம் திருநாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு கோமதி அம்மன் தேரில் எழுந்தருளினார். காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது.
ஆதிதிராவிட அமைச்சர் ராஜலட்சுமி, கலெக்டர் சந்தீப் நந்தூரி தேர் வடம் பிடித்து இழுத்தனர். இரவில் அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். முக்கியத் திருவிழாவான ஆடி தபசுக் காட்சி நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கும், இரவுக் காட்சி நள்ளிரவு 12:00 மணிக்கும் நடக்கிறது.