பதிவு செய்த நாள்
05
ஆக
2017
10:08
மதுரை அழகர்கோவில் சோலைமலை மண்டபம் முருகன் கோயில் அருகே அவ்வைக்கு முக்தி அளித்த நாவல் மரத்தை இரும்பு வேலியிட்டு கோயில் நிர்வாகம் பாதுகாத்து வருகிறது. அழகர்கோவில் மலை பழமையும், புராதன சிறப்பும் பெற்றது. கள்ளழகர் கோயிலில் இருந்து 3 கி.மீ., தொலைவில் அடர்ந்த வனத்தில் சோலைமலை மண்டபம் முருகன் கோயில் உள்ளது. முருகனின் ஆறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அவ்வையார் காலத்தில் சோலைமலை மண்டபம் முருகன் கோயில் அருகே அடர்ந்த வனத்தில் நாவல் மரம் மீது அமர்ந்திருந்த முருகன், அவ்வையாரின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு, அவ்வையே உனக்கு சுட்டப்பழம் வேண்டுமா. சுடாத பழம் வேண்டுமா, எனக்கேட்டார். பழத்தில் ஏதையா சுட்டப்பழம், சுடாதபழம், என கேட்டு தனது
ஆணவத்தை புரிந்து கொண்டு அடக்கம் காக்க முருகன் நடத்திய திருவிளையாடல் என அவ்வையார் எண்ணி வருந்தினார் என்பது புராதன வரலாறு.
முக்தி அளித்த நாவல் அவ்வைக்கு முருகன் அருளால் முக்தி வழங்கிய மரமாக நாவல் மரம் இன்றளவும் போற்றப்படுகிறது. அழகர்கோவில் மலை, சோலைமலை மண்டபம் முருகன் கோயில், அதற்கு மேல் உள்ள என்றும் வற்றாத நூபுர கங்கை தீர்த்தம் ஆகியவற்றில் தரிசனம் மேற்கொள்ள நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் வருவர். அவ்வைக்கு முக்தி அளித்த நாவல் மரம் பக்தர்களின் முக்கிய வழிபாட்டு தலங்களில் ஒன்றாக உள்ளது.
அவ்வை காலத்து நாவல் மரம் பட்டுப்போகாமல் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மரத்திற்கு கீழ் பிள்ளையார் கோவில் உள்ளது. மரத்தின் புராதான வரலாறு குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் நாவல் மரம், மரத்தின் மீது முருகன், மரத்திற்கு கீழே அவ்வையார் படம் வரைத்து முருகனின் திருவிளையாடல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நாவல் மரத்தையும், அதன் புனிதம் காக்கவும் இரும்பு வேலியிட்டு கோயில் நிர்வாகம் பாதுகாத்து வருகிறது.