பதிவு செய்த நாள்
18
ஆக
2017
12:08
சென்னை : கிருஷ்ணகிரி மாவட்டம், வானமங்கலத்தில், பழமையான ஆஞ்சநேயர் கோவில் திருப்பணியின்போது, புலி சின்னத்துடன், சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அறம் வரலாற்று ஆய்வு மையத்தினர், கிருஷ்ணகிரி மாவட்டம், வானமங்கலத்தில், பழமையான ஆஞ்சநேயர் கோவில் புனரமைப்பு நடப்பதை அறிந்து, அங்கு ஆய்வு செய்தனர். அப்போது, சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று, உடைந்த நிலையில் கிடைத்தது.
இது குறித்து, பேரவை தலைவர், அறம் கிருஷ்ணன் கூறியதாவது: பெருமாள் கோவிலுக்கு சொந்தமான கருட கம்பம் ஒன்று கீழே கிடந்துள்ளது. அதை துாக்கி நிறுத்தும் போது, அதன் அடிப்பகுதியில், இரண்டு கற்கள் கிடந்துள்ளன. ஒன்றை, கம்பத்திற்கு கீழே வைத்து, மற்றொன்றை வெளியில் எடுத்து போட்டுள்ளனர். அது, சோழர் கால, வணிக குழுவினரின் கல்வெட்டு.இதன் மேல்பகுதியில், விஜயநகர் பேரரசின்சின்னமான, கண்ட பேரண்ட பறவை, சோழர்களின் சின்னமான புலி, வணிகக்குழுவினரின் சின்னமான, சித்திரமேழி ஆகியவை உள்ளன. இதுவரை, கிருஷ்ணகிரி மாவட்டம், பெண்ணேஸ்வர மடம் கல்வெட்டில் மட்டுமே, செங் கோலுடன் புலி சின்னம் கிடைத்துள்ளது. அது, வாணகோவரையரின்மகளும், மூன்றாம் ராஜராஜ சோழனின் பட்டத்தரசியுமான கூத்தாடும் தேவர், நாச்சியாரின் கல்வெட்டு வரிகளுக்கு முன் செதுக்கப்பட்டுள்ளது. சித்திரமேழி என்பதற்கு, அழகிய கலப்பை என, பொருள். இந்த சின்னம், விவசாயிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட குழுவிற்கு சொந்தமானது. கல்வெட்டில் ஏழு வரிகள் உள்ளன. அதில், ஹொய்சாளர்களின் கடைசிஅரசனான வீர வல்லாள தேவர் என்ற பெயர் உள்ளது. ஓசூரில் உள்ள வணிக குழுக்களுக்கும், தொண்டை மண்டல வணிக குழுக்களுக்கும் தொடர்பு இருந்து இருக்கலாம். மேலும், இது, ஹொய்சாள அரசனான, வீரவல்லாளன் காலத்தில் வெட்டப்பட்டு இருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.