பதிவு செய்த நாள்
23
ஆக
2017
12:08
மோகனூர்: மணியங்காளிப்பட்டி, புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில், வரும், 29ல் தேர்த்திருவிழா கோலாகலமாக நடக்கிறது. நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த பேட்டப்பாளையம் மணியங்காளிப்பட்டியில், புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா வரும், 27ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு, சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில், கொடியேற்றம், நவநாள் திருப்பலி நடக்கிறது. ஆக., 28ல் மாலை, 6:00 மணிக்கு பங்கு தந்தை பிரகாஷ் தலைமையில், நவநாள் ஜெபம், திருப்பலி நடக்கிறது. வரும், 29 மாலை, 6:00 மணிக்கு சேலம் மறைமாவட்ட முதன்மை குரு ஜான்ஜோசப் தலைமையில், திருவிழா திருப்பலி நடக்கிறது. இரவு, 8:30 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் எழுந்தருளும் அன்னை, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்குகிறார். வழிநெடுகிலும், பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலை அணிவித்தும், அன்னையை வழிபடுகின்றனர். இதையடுத்து, கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை, பங்கு தந்தை, பங்கு மக்கள், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.