பதிவு செய்த நாள்
26
ஆக
2017
12:08
கூடலுார்;முதுமலையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், யானைகள் பூஜை செய்த நிகழ்ச்சி, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், நேற்று மாலை விநாயகர் சதுர்த்தி தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முகாமிலிருந்து வளர்ப்பு யானைகள் அங்குள்ள விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, வரிசையாக நிறுத்தப்பட்டன. முதலில், பழங்குடி மக்கள் தங்கள் பாரம்பரிய முறையில் பூஜை செய்தனர்.
தொடர்ந்து, வளர்ப்பு யானை கிருஷ்ணா, கோவில் மணி அடித்து, பூஜை செய்ததுடன், கோவிலை சுற்றி வந்து, விநாயகரை வணங்கியது. அப்போது, வரிசையாக நிறுத்தப்பட்ட மற்ற வளர்ப்பு யானைகள், தும்பிக்கையை துாக்கி பிளிறியப்படி விநாயகரை வணங்கின. யானைகள் நடத்திய விநாயகர் பூஜை, சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தியது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, யானைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவுகளுடன், பல வகை பழங்கள் வழங்கப்பட்டன.விழாவில், வனத்துறை செயலர் நிஜாமுதீன், முதுமலை கள இயக்குனர் சீனிவாசரெட்டி, துணை இயக்குனர் சரவணன், கால்நடை டாக்டர் விஜயராகவன், உதவி வன பாதுகாவலர் சுந்தர்ராஜன் மற்றும் வன ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.