பதிவு செய்த நாள்
26
ஆக
2017
12:08
அவிநாசி :அவிநாசியில், பெரிய தேர் நிலையம் அருகே, வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அதையொட்டி, ஸ்ரீ வியாசராஜர் ராமநாம பஜனை மடம் அமைந்துள்ளது. வியாசராஜர் மூலம் அமைக்கப்பட்ட இந்த மடம், சிதிலமடைந்து காணப்பட்டது. கூட்டு வழிபாட்டின் நோக்கத்தை உணர்த்தவும், பஜனை பிரியரான ஆஞ்சநேயர் சன்னதியில்,ஸ்ரீ ராம நாமம் ஒலிக்கும் வகையிலும், மடத்தை புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பக்தர்களின் முயற்சியால், பஜனை மடம் புனரமைக்கப்பட்டு, நேற்று திறக்கப்பட்டது. கரிவரதராஜ பெருமாள் கோவில் முரளி பட்டாச்சார்யார் முன்னிலையில், சிறப்பு ஹோமம் நடந்தது. முன்னதாக விஜயமங்கலம் சொக்கலிங்கம் சொற்பொழிவு ஆற்றினார். முன்னாள் பி.டி.ஓ., சண்முகசுந்தரம் குழுவினர் இன்னிசை மற்றும் அன்னூர் சண்முகம் குழுவினர் நாம சங்கீர்த்தன பஜனை நடந்தது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், இன்று காலை, ஸ்ரீ சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலையில், கோத்தகிரி அரையட்டி, அருணாசலமஹிமா சுவாமி குழுவினரின் சிறப்பு பஜனை இசை நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்தர்கள் பேரவையினர் செய்துள்ளனர்.