பதிவு செய்த நாள்
28
ஆக
2017
01:08
திருப்பூர் : “கருணைக்கடலாக உள்ள விநாகய பெருமானிடம், வேண்டியவருக்கு வேண்டிய வரம் கிடைக்கும்,” என, கூனம்பட்டி திருமடத்தை சேர்ந்த நடராஜ சுவாமிகள் பேசினார். தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் மற்றும் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா, தமிழர் கலாச்சார விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாநகரில், 48 இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் நேற்று ஊர்வலமாக, ஆலாங்காடு பகுதிக்கு எடுத்துவரப்பட்டது. பெண்கள், 108 பேர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி நிறைவு விழா நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் ரமேஷ், பொருளாளர் தங்கவேல், மாவட்ட அமைப்பாளர் காசி சிவா, சக்திசேனா அமைப்பாளர் வீரமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ராம் வரவேற்றார். திருமுருகன்பூண்டி இளைய ஆதீனம் ஏனாதியார் திருமடத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம், கூனம்பட்டி திருமடத்தை சேர்ந்த நடராஜ சுவாமிகள், அருளாசி வழங்கினர்.
கூனம்பட்டி சுவாமி பேசியதாவது: முழு முதற்கடவுளான விநாயகரை வழிபட்டால், அனைத்து வினைகளும் தீரும்; வெற்றி கிடைக்கும். மங்கலம் வழங்கும் நாயகனை மனமுருக வழிபட வேண்டும். கருணைக்கடலாக உள்ள விநாகய பெருமானிடம், வேண்டியவருக்கு வேண்டிய வரம் கிடைக்கும். விஷ்வ ஹிந்து பரிஷத், தமிழர் கலாச்சார விழாவாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதால், அனைவரும் ஆன்மிக பாதைக்கு வந்துள்ளனர். எந்தவொரு செயலையும், விநாயகர் வழிபாட்டுடன் துவக்கினால் வெற்றி நிச்சயம். கிராமக்கோவில் பூசாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதன் மூலம், இறைவழிபாடு மேம்படுத்தப்பட்டுள்ளது. இறைவனை உரிய காலத்தில் வழிபட வேண்டும். கோவில்களில் உள்ள தெய்வங்களுக்கு காலம் கடத்தாமல் பூஜைகள் நடக்க வேண்டும். காலம் தவறி பூஜை செய்தால் மழை வளம் குறையும்; அரசுக்கும் ஆபத்து வரும். இறைவனது அருளாசியுடன் வழிபாட்டை முடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். மாவட்ட தலைவர் ராம் பேசுகையில், “விநாயகர் தமிழ்க்கடவுள் இல்லை; வடக்கே இருந்து கொண்டுவரப்பட்டவர் என, தேவையற்ற கருத்தை விஷமிகள் பரப்புகின்றனர். தமிழ் இலக்கணமாக உள்ள, தொல்காப்பியத்தில்,
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே விநாயகர் வழி பாடு குறித்து தெளி வாக விளக்கப்பட்டுள்ளது. “தமிழர்களின் தெய்வமாக உள்ள விநாயகர் வழிபாட்டை அனைவரும் பக்தியுடன் நடத்த வேண்டும். சில நேரங்களில் வழிபாட்டு உரிமைகளின் கதவு அடைக்கப்படும் போது, தடைகளை உடைக்க அனைவரும் தயாராக இருக்க வேண் டும்,” என்றார். கூட்டத்தில், 500க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். கூட்டம் நிறைவடைந்ததும், சிலைகள் சாமளாபுரம் குளத்துக்கு எடுத்து சென்று கரைக்கப்பட்டன.