பதிவு செய்த நாள்
28
ஆக
2017
01:08
கோவை : கோவையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று பல்வேறு குளங்களில் விசர்ஜனம் செய்யப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்து அமைப்புகள் சார்பில், கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து நேற்று விசர்ஜன ஊர்வலம் நடந்தது. குனியமுத்துார் தர்மராஜா கோவிலில் இருந்து கிளம்பிய ஊர்வலத்தில் கொண்டு வரப்பட்ட சிலைகள், குனியமுத்துார், பாலக்காடு ரோடு வழியாக, குனியமுத்துார் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
இதேபோன்று போத்தனுார், சாரதா மில் ரோட்டில் ஊர்வலம் துவங்கி, சங்கம் வீதியில் ஒன்று கூடி, சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி ரோடு சென்று, குறிச்சி குளத்தில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழாவின் மூன்றாவது நாளான நேற்று, குறிச்சி குளத்தில் 72, குனியமுத்துார் குளத்தில், 25, முத்தண்ணன் குளத்தில், 6, சிங்காநல்லுார் குளத்தேரி குளத்தில், 32, சூலுார் குளத்தில், 3, வெள்ளக்கிணற்றில் 12, பேரூர் குளத்தில், 3, வாளையார் அணையில் ஒன்று என, மொத்தம், 154 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு, மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, நாளையும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில், விசர்ஜன ஊர்வலம் நடக்க உள்ளது.