பதிவு செய்த நாள்
04
செப்
2017
01:09
கூவத்துார் : கூவத்துார், திருவாலீஸ்வரர் கோவிலில், 2.5 கோடி ரூபாயில் திருப்பணிகள் நடக்கின்றன. இதையடுத்து, வரும், 10ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கூவத்துாரில், மிக பழமையான கோவில்களில், திரிபுரசுந்தரி உடனுறை திருவாலீஸ்வரர் கோவில் குறிப்பிடத்தக்கது. தமிழக அறநிலைய துறையின், மாமல்லபுரம் ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை நிர்வாகம், இக்கோவிலை நிர்வகிக்கிறது. ராமாயண வாலி, கிஷ்கிந்தா மக்களை அச்சுறுத்திய அசுரன் மாயாவியை அழித்து, பிரமஹத்தி தோஷம் அடைந்தார். இதிலிருந்து விடுபடவும், போரில், எதிரியின் பலத்தில் பாதியை பெறவும், வசிஷ்ட முனிவரிடம் ஆலோசித்து, கூவகம் (ரகசிய இடம்) பகுதி சிவபெருமானை வழிபட்டு, வரம் பெற்றார். பழங்கால கூவகமே, தற்போது கூவத்துார் என அழைக்கப்படுகிறது. இக்கோவில் இறைவன், வாலி வழிபட்டதால், திருவாலீஸ்வரர் என, விளங்குகிறார்.
கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள கோவிலில், சுவாமி, திரிபுரசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர் தனித்தனி சன்னிதிகளில் வீற்றுள்ளனர். கோவிலை ஒட்டி, வாலி தீர்த்த குளமும் உள்ளது. கடந்த, 79 ஆண்டுகளாக, கோவில் பராமரிப்பின்றி சீரழிந்தது. மீண்டும் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு, 2012ம் ஆண்டு, கூவத்துாரைச் சேர்ந்த, சென்னை தொழில் அதிபர் கோதண்டராமன் தலைமையில், திருப்பணி குழு அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கோவில் திருப்பணிகளுக்காக, திருக்கோவில் ஆணையர் பொதுநிதியில், 14.20 லட்சம் ரூபாய், குள மேம்பாட்டிற்காக, சுற்றுச்சூழல்துறை நிதி, 16 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. திருப்பணி குழுத் தலைவர் உள்ளிட்டோர் நன்கொடை மூலம், தற்போது, 2.5 கோடி ரூபாய் மதிப்பில், கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து சன்னிதிகள் புதுப்பிக்கப்பட்டு, அவற்றுக்கு விமானங்கள், ஐந்துநிலை ராஜகோபுரம், கொடிமரம், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. உற்சவர்களுக்கு ஐம்பொன் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. குளம், உட்குளம், சுற்றுச்சுவர் ஆகியவையும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் மஹா கும்பாபிஷேகம், வரும், 10ம் தேதி, நடைபெற உள்ளது. கூவத்துார், செய்யூர், பவுஞ்சூர், சுற்றுப்புற பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்பர் என்பதால், குடிநீர், சுகாதாரம், சிறப்பு பேருந்து உள்ளிட்ட வசதிகளுக்காக, அறநிலையத்துறையினர், முக்கிய துறையினரிடம் பரிந்துரைத்துள்ளனர்.