பதிவு செய்த நாள்
18
செப்
2017
12:09
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள கற்சிலைகள் சுத்தம் செய்யப்பட்டு பளபளக்கிறது.கோயிலில் ஏராளமான சுவாமி கற்சிலைகள் உள்ளன. அச்சிலைகளுக்கு எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு திரவிய அபிஷேகங்கள் நடக்கிறது. இதனால் அச்சிலைகள் எண்ணெய் அழுக்கடைந்து சுவாமிகளின் முகங்கள் சரியாக தெரியாமல் இருந்தது. கோயிலில் புதிதாக பொறுப்பேற்ற துணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷிணி, அந்த சுவாமி சிலைகளை துாய்மைப்படுத்த உத்தரவிட்டார். அதன்படி அரிசி மாவுடன் தயிர் கலந்து சுவாமி கற்சிலைகளில் பூசப்பட்டு, தண்ணீர்மூலம் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது. இதனால் சுவாமி சிலைகள் பளபளப்பாகவும் தொன்மை மாறாமலும் காட்சியளிக்கின்றன. முதல்கட்டமாக கோயில் மகா மண்டபத்திலுள்ள தட்சிணாமூர்த்தி, சூரியன், சந்திரன், நவ வீரர்கள், இரட்டை விநாயகர், அதிகாரா நத்தி, சண்முகர் சன்னதியிலுள்ள பஞ்சலிங்கம், செந்தில் ஆண்டவர், சனீஸ்வரர், ஜூரதேவர், ராகு, கேது, கம்பத்தடி மண்டபத்திலுள்ள நந்தி, மயில், மூஞ்சுறு, ராஜகோபுரத்தின் அடியிலுள்ள மூன்று விநாயகர் கற்சிலைகள் துாய்மைப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற கற்சிலைகள் சுத்தம் செய்யும் பணி விரைவில் தொடங்க உள்ளது. தவிர கோயிலுக்குள் உள்ள அனைத்து துாண்களிலும் இந்த துாய்மைப் பணி நடக்க உள்ளதாக துணை கமிஷனர் தெரிவித்தார்.