பதிவு செய்த நாள்
30
செப்
2017
02:09
ஓசூர்: தளி அருகே நடந்த கவுரம்மா கோவில் திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, விநாயகர், கவுரம்மா பல்லக்கை சுமந்து சென்று, கும்ளாபுரம் ஏரியில் கரைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, தளி அடுத்த கும்ளாபுரம் கிராமத்தில் உள்ள கவுரம்மா கோவிலில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, விநாயகர் மற்றும் கவுரம்மா சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஒரு மாதம் சிறப்பு பூஜைகள் செய்து ஏரியில் கரைப்பது வழக்கம். கடந்த மாதம், 25ல் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தியின் போது, கும்ளாபுரம் கிராமத்தில் உள்ள கவுரம்மா கோவிலில், விநாயகர் மற்றும் கவுரம்மா சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 27ல், அக்னி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் காலை, அம்மனுக்கு சிறப்பு அபி?ஷக அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் மாலை, 4:00 மணிக்கு, விநாயகர் மற்றும் கவுரம்மாவிற்கு தனித்தனியாக பல்லக்கு தயார் செய்து, அதில் விநாயகர் மற்றும் கவுரம்மா சிலைகளை வைத்து, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்லக்கை சுமந்து ஊர்வலமாக சென்றனர். அப்போது சிவானந்த சிவாச்சாரியார் மடாதிபதி ஆசிரமத்தில், சுவாமிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக பல்லக்கை சுமந்து சென்ற பக்தர்கள், கும்ளாபுரம் ஏரியில் விநாயகர், கவுரம்மா சிலைகளை கரைத்தனர். இதில், தளி, தேன்கனிக்கோட்டை, பேலாளம், ஆச்சுபாலம், கோபனப்பள்ளி மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.