காரைக்குடி, கல்வெட்டு ஆராய்ச்சி மேம்படுவதன் மூலமே நம்முடைய சங்க கால இலக்கியங்களின் உண்மை தன்மை உறுதி செய்ய முடியும் என காரைக்குடியில் நடந்த கருத்தரங்கில் வரலாற்று பேரவை செயலர் ராஜேந்திரன் பேசினார். அழகப்பா பல்கலை வரலாற்று துறை சார்பில் தமிழக வரலாற்று பேரவையின் 24-வது கருத்தரங்கம் நடந்தது. பதிவாளர் பாலசந்திரன் தொடங்கி வைத்தார். வரலாற்று துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பாரதிதாசன் முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். தமிழக வரலாற்று பேரவை பொது செயலாளர் ராஜேந்திரன் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் வரலாற்றில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்கிறது. இந்திய வரலாற்றில் முக்கியமானது அசோகர் கால கல்வெட்டுக்கள். தற்போது தென் இந்தியாவில் உள்ள அகழ்வாராய்ச்சிகள் சங்க கால வரலாற்றை அறிய உதவுகிறது. இலக்கியத்தில் எழுத்துக்களாக உள்ளவை அகழ்வாராய்ச்சியின் மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும். 1922-ம் ஆண்டு வரை இந்திய வரலாறு வேதங்களை அடிப்படையாக கொண்டே இருந்தது. அதன்பிறகு சிந்துசமவெளி நாகரீகத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த வரலாற்றின் அடிப்படையும் மாறலாம். நிலவியல் ஆராய்ச்சி மட்டுமே நடந்து வருகிறது. கடல் ஆராய்ச்சி என்பது மிக குறைந்த அளவிலேயே உள்ளது. கடல் ஆராய்ச்சி மேம்படாததற்கு நிதிபற்றாக்குறை, தொழில் நுட்பம், திறமையான ஆராய்ச்சியாளர்கள் இல்லாமை காரணம். கடல் ஆராய்ச்சி மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2004-ம் ஆண்டுக்கு முன்பு வரை கடல் கொண்டது என படித்துள்ளோம். ஆனால், சுனாமி வந்தபிறகே கடல் கொண்டது என்பது நம்பக்கூடியதாக உள்ளது, என்றார். நிகழ்ச்சியில் மதுரை பல்கலை முன்னாள் பேராசிரியர் கோபாலகிருஷ்ணன், அழகப்பா பல்கலை மகளிரியல் துறை தலைவர் மணிமேகலை, தமிழ்நாடு வரலாற்று பேரவை தலைவர் கருணானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் பரந்தாமன் நன்றி கூறினார்.