தேவதானப்பட்டி:சில்வார்பட்டியில் மழை வேண்டி சிறுகுளம் கண்மாய் ஆயக்கட்டு சங்கம் சார்பில், குதிரை எடுத்து ஊர்வலம் நடந்தது.பெரியகுளம், சில்வார்பட்டியில் சிறுகுளம் கண்மாய் உள்ளது. வராகநதியில் வரும் நீரை வடுகபட்டி வெள்ளக்கரடு முனியாண்டி கோவில் அருகில் தடுப்பணை கட்டி 5 கி.மீ., துாரம் தனி வாய்க்கால் மூலம் கொண்டு வந்து கண்மாய் நிரப்பப்படுகிறது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாவும் 300 ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, வாழை சாகுபடி நடந்து வருகிறது. தொடர் மழை வேண்டியும், விளை பொருட்கள் பாதிப்பு இன்றி விளைச்சல் கொடுப்பதற்காகவும் ஆண்டு தோறும் சிறுகுளம் கண்மாய் ஆயக்கட்டு சங்கம் சார்பில், அய்யனார் சாமிக்கு குதிரை எடுத்து ஊர்வலம் நடக்கும். நடப்பு ஆண்டு புரட்டாசி சனி வாரத்தில் குதிரை அலங்கரிக்கப்பட்டு பெருமாள் கோயிலில் குதிரைக்கு கண் திறந்து ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தில் குதிரை ஓடி, ஆடி விளையாடியது. பின், சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய்கரையில் உள்ள அய்யனார்கோயிலில் குதிரை வைக்கப்பட்டது.