பதிவு செய்த நாள்
19
அக்
2017
01:10
திருப்பூர் : திருப்பூரில், புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்பை சுவைத்து பல்வேறு தரப்பினரும் நேற்று பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆண்டுக்கு ஒருமுறை வரும் தீபாவளி பண்டிகைக்கான, ஏற்பாடுகள் மாதக்கணக்கில் நடந்தாலும், அதன் நினைவுகள் அடுத்த ஆண்டு வரை நீடிப்பது வழக்கம். அவ்வகையில், நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் சிறப்பாக அனைத்து தரப்பினரும் கொண்டாடினர். அதிகாலையில் எழுந்து, கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, மகிழ்ச்சி பொங்க பண்டிகையை கொண்டாடினர். நேற்று முன்தினம் இரவு முதலே கண்களை கவரும் வாண வேடிக்கைகளும், காதை பிளக்கும் வெடிகளுடனும் பண்டிகையை மக்கள் வரவேற்றனர்.
தீபாவளி பண்டிகை, செல்வவளம் பெருகும் லட்சுமி குபேரர் சிறப்பு பூஜை செய்தும் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. குபேர யந்திரம் செய்து, இச்சிறப்பு பூஜையை வீடுகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் செய்தனர். திருப்பூர் நகரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவில், விஸ்வேஸ்வரர் கோவில், அய்யப்பன் கோவில், குரு வாயூரப் பன் கோவில், திருப்பூர் திருப்பதி கோவில், கொங்கணகிரி முருகன் கோவில், பூண்டி திருமுருகநாதசாமி கோவில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிடைத்த விடுமுறையை சுற்றுலா தலங்களில் கழிக்கும் வகையிலும், ஏராளமானோர் வெளியூருக்கு புறப்பட்டுச் சென்றனர். கடந்த ஒரு வாரமாக தீபாவளி பர்ச்சேஸ்க்கு வந்த மக்கள் கூட்டம் மற்றும் வாகனங்களால் திணறிய திருப்பூர் நகர முக்கிய வீதிகளில் நேற்று அந்த கூட்டம் குறைந்து நெரிசலின்றி காணப்பட்டது.
வெளி மாவட்டங்களுக்கு செல்லும் சிறப்பு பஸ்கள் கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலும் இயக்கப்பட்டன. இத னால், பெரும்பாலான வெளியூர் பயணிகள் கூட் டம் குறைந்து பரபரப்பு குறைந்து வழக்கம் போல் பஸ்கள் இயங்கின. பஸ் பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்ட நிலையிலும் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் கூட்டம் பரபரப்பாகவே இருந்தது. வெளியூர் செல்வோர் மற்றும் வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள் கூட்டம் அதிகளவில் நேற்று காணப்பட்டது. சொந்த ஊர்களுக்கு பண்டிகை கொண்டாடச் சென்றோர் நிறுத்திச் சென்ற இருசக்கர வாகனங்களால் பார்க்கிங் ஸ்டாண்ட்கள் நிரம்பி வழிந்தன.