பதிவு செய்த நாள்
19
அக்
2017
01:10
புதுச்சேரி: பழந்திண்ணி வவ்வால்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக, கழுப்பெரும்பாக்கம் கிராம மக்கள், பட்டாசு வெடிக்காமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு அருகே, தமிழக பகுதியான கழுப்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆலமரத்தில், பழந்திண்ணி வவ்வால்கள் ஏராளமாக வசித்து வருகின்றன. இந்த பழந்திண்ணி வவ்வால்களுக்காக, கடந்த ஐந்து தலைமுறைகளாக இந்த கிராம மக்கள், பட்டாசு வெடிக்காமல், சத்தமில்லாத தீபாவளியை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். இரவில் உணவு வேட்டை நடத்திவிட்டு பகலில் மரக்கிளைகளில் தொங்கியபடி ஓய்வெடுக்கும் நேரத்தில் பட்டாசு வெடி சத்தத்தை கேட்டு, பழந்திண்ணி வவ்வால்கள் கலைந்து சென்றுவிடும் என்பதால், வெடிப்பதில்லை.
தீபாவளி பண்டிகை என்றில்லாமல், இக்கிராமத்தில் திருமணம், காது குத்து, கோவில் திருவிழா என, எந்த நிகழ்ச்சிகளிலும் பட்டாசு சத்ததைக் கேட்க முடியாது. வழக்கம்போல, இந்தாண்டும் தீபாவளி பண்டிகைக்கு இந்த கிராம மக்கள் பட்டாசு வெடிக்கவில்லை. இக்கிராம மக்கள், வவ்வால்களை தங்களின் செல்லக் குழந்தைகளாகவே பாவிக்கின்றனர். மரத்தின் கீழ், அடிபட்டு விழுந்து கிடக்கும் வவ்வால்களை, யார் பார்த்தாலும் அடுத்த நிமிடமே, அவற்றுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மரக்கிளையில் ஏற்றி விடுகின்றனர். இறந்துவிட்டால், மவுன அஞ்சலி செலுத்தி, புதைத்து விடுகின்றனர். வேட்டையாடுபவர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஊருக்குள் நுழைய விடுவதே கிடையாது. அதேபோல, மேளம் அடிப்பது, வாண வேடிக்கை நடத்துவது என பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எதையும் இந்த கிராம மக்கள் செய்வது இல்லை.